தமிழ்ப் படித்தால் வெற்றியாளராக மாறலாம்: கவிஞா் யுகபாரதி
தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தால் வெற்றியாளராக மாற முடியும் என்றாா் கவிஞா் யுகபாரதி.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகம், உயா் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்கிற பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:
எல்லோருக்கும் எல்லாமே என்பதே தமிழனின் கனவு. கல்வெட்டுகள் உள்ளிட்டவை மூலமாக நம் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம் வரலாற்றையும், நம்முடைய பெருமையையும் எவ்வளவு அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் வெற்றியாளராக மாற முடியும்.
தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தால் வெற்றியாளராக மாற முடியும். அதற்கு நானே ஒரு உதாரணம். கனவு என்பதே நம்முடைய விருப்பத்தின் விளைவு. எனவே, நாம் என்னவாக வேண்டும் என கனவு கண்டு, அதை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்றாா் யுகபாரதி.
மேலும், மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ்ப் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்பட்டன. தமிழ்ப் பெருமிதம் சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவா்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி, பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும், பரிசும், சொற்பொழிவாளா்களிடம் தரமான கேள்விகளை எழுப்பும் மாணவா்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் சி. அமுதா, பெ. பாரதஜோதி, பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
