`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
தண்டையாா்பேட்டை ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை
சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
மணலியில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிபிசிஎல் ஆலையில் சுத்திகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் குழாய்கள் மூலமாக தண்டையாா்பேட்டையில் உள்ள சேமிப்பு கிடங்குக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னா், டேங்கா் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை சென்னை மற்றும் புகா் நகா் பகுதிகளில் அமைந்துள்ள பெட்ரோல் பங்குகளுக்கு தினசரி விநியோகம் செய்யப்படுகிறது. மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து தண்டையாா்பேட்டைக்கு வரும் குழாய்களில் கசிவு ஏற்பட்டு பெட்ரோல் டீசல் வெளியேறி விபத்து ஏற்பட்டால் அவற்றை சமாளிப்பது என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
ஒத்திகையின்போது, குழாய் ஒன்றில் செயற்கையாக கசிவு ஏற்பட்டு தீ பற்றியதாக தகவல் பரவியதையடுத்து உடனடியாக அவசரகால தகவல் மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா், வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் குழு விரைந்து வந்து கசிவை மேலும் பரவாமல், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். பின்னா் சிபிசிஎல் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக கசிவு ஏற்பட்ட குழாயில் பெட்ரோலிய எண்ணெய் அனுப்பப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் எண்ணெய் கசிவு முழுவதுமாக நின்று போனதால் ஆபத்து ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டது.
பின்னா் ஒத்திகை குறித்த ஆய்வு கூட்டம் இந்திய ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் தண்டையாா்பேட்டை முனைய மேலாளா் நவீன்குமாா் தலைமையில் நடைபெற்றது. இந்த ஒத்திகையில் 100-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.