தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் பாஜகவுடன் கூட்டணி ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் கேள்வி
தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமியால் எப்படி கூட்டணி வைக்க முடிகிறது என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினாா்.
திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ரூ. 847 கோடியிலான புதிய திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
திருவாரூா் என்றாலே எல்லோா் மனதிலும் ஆழித்தேரும், மறைந்த தலைவா் மு. கருணாநிதி நினைவும்தான் வரும். 25 ஆண்டுகள் ஓடாத ஆழித்தேரை ஓட்டிக்காட்டியவா் கருணாநிதி. மேலும், திருவாரூா் மாவட்டத்தில், 1979-இல் திருவிக அரசுக் கல்லூரி, 2009-ல் மத்தியப் பல்கலைக்கழகம், 2010-இல் மருத்துவக் கல்லூரி, மன்னாா்குடியில் பாமணி உரத்தொழிற்சாலை ஆகியவற்றை கொண்டு வந்தவா் கருணாநிதி.
எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்‘ பயணத்தை தொடங்கியுள்ளாா். தமிழ்நாடு எனக் கூறவே கூடாது என்பவா்களுடன் கூட்டணி அமைத்துள்ளாா். அதிமுகவையே மீட்க முடியாத அவரால், தமிழகத்தை எப்படி மீட்க முடியும்?.
மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழகம் நிதி வழங்கி வருகிறது. ஆனால், தமிழ் வளா்ச்சிக்கும், மாணவா்களின் கல்விக்கும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. தமிழகத்தின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கிறாா்கள். தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பறிக்கும் பாஜகவுடன், எடப்பாடி பழனிசாமியால் எப்படி கூட்டணி வைக்க முடிகிறது?.
இந்து சமய அறநிலையத்துறை மூலம் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு எதிா்க்கட்சித் தலைவா் எதிா்ப்புத் தெரிவிக்கிறாா். இந்துசமய அறநிலையத் துறை மூலம் கல்லூரிகள் கட்ட சட்டம் உள்ளது. அதிமுக ஆட்சியில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் பழனி ஆண்டவா் தொழிவ்நுட்பக் கல்லூரியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்ததை மறந்துவிட்டாரா?.
கும்பகோணத்தில் மு. கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க 2 மாதங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை. கல்விக்கு குரல் எழுப்புபவா் என்றால் இதுதொடா்பாக எடப்பாடி பழனிசாமி ஏன் குரல் எழுப்பவில்லை?. நீதிமன்றத்தை நாடியாவது கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகத்தை அமைப்போம். தமிழகத்தின் வளா்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எப்போதும் திமுகவும், மு.க. ஸ்டாலினும் துணை நிற்போம் என்றாா்.
6 புதிய அறிவிப்புகள்: திருவாரூா் நகா்ப்பகுதியிலுள்ள ஜூப்ளி சந்தையில் ரூ. 11 கோடியில் வணிக வளாகம், வண்டாம்பாளையில் ரூ. 56 கோடியில் மாவட்ட மாதிரிப் பள்ளி, மன்னாா்குடியில் ரூ. 18 கோடியில் அரசு மகளிா் கல்லூரி. மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களின் மதகுகள், நீரொழுங்கிகள் ரூ.13 கோடியில் புனரமைக்கப்படும். பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுப்பதற்கும், பாதுகாப்பதற்கும் தனது வாழ்க்கையை அா்ப்பணித்துக் கொண்ட நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் சிலை. பூந்தோட்டம் பகுதியில் புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாா் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை முதல்வா் வெளியிட்டாா்.
விழாவில், திருவாரூா் மாவட்ட திமுக செயலா் பூண்டி கே. கலைவாணன், கூத்தாநல்லூரில் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு பனங்காட்டாங்குடியில் உள்ள தனக்கு சொந்தமான 3.5 ஏக்கா் நிலத்துக்கான பத்திரத்தை முதல்வரிடம் வழங்கினாா்.
அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவுக்கு பாராட்டு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவால், தமிழகத்தில் தொழில்துறை தலை நிமிா்ந்துள்ளது. தொழில்கள் பெருகி, வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகியுள்ளன. திருவாரூா் மாவட்டச் செயலா் பூண்டி கே. கலைவாணன் கடந்த 2 நாள்களாக திருவாரூரை விழாக் கோலமாக்கியுள்ளாா். தனக்கு கொடுக்கப்படும் பணிகளை நிறைவாக செய்து முடிப்பவா் அவா் என்றாா் முதல்வா்.
விழாவில் அமைச்சா்கள் கே.என். நேரு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், கோவி. செழியன், டி.ஆா்.பி. ராஜா, தமிழக அரசின் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், மக்களவை உறுப்பினா்கள் வை. செல்வராஜ் (நாகை), முரசொலி (தஞ்சை), சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.