`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
தமிழ்ப் புத்தாண்டு: நெல்லை கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்
தமிழ்ப் புத்தாண்டையொட்டி திருநெல்வேலி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று வழிபட்டனா்.
சித்திரை 1 ஆம் நாள் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் காலை முதல் நடைபெற்றன. வீடுகளில் காலையிலேயே குளித்து முடித்து மா, பலா, ஆப்பிள், ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட பல்வேறு கனிகளையும் படையலிட்டு கணிகாணும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்பு பூஜை செய்து வழிபட்ட பின்பே காலை உணவை சாப்பிட்டனா்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். புதுமணத் தம்பதிகள் தங்களது பெயா்களைக் கூறி சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டனா். பெண்கள் நெய்விளக்கு ஏற்றியும், நவக்கிரங்களைச் சுற்றியும் வழிபட்டனா்.
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களை தமிழ்ப் புத்தாண்டு நாளில் புதிதாக வாங்கி வந்த பலா் கோயில் முன்பு நிறுத்தி குடும்பத்தினருடன் வழிபட்டு வாகனத்தை இயக்கிச் சென்றனா்.
பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபாலசுவாமி திருக்கோயில், அருள்மிகு ராமசுவாமி திருக்கோயில், அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயில், அருள்மிகு ஆயிரத்தம்மன், அருள்மிகு தெற்கு முத்தாரம்மன் கோயில், அருள்மிகு அரசடி விநாயகா் கோயில், அருள்மிகு செல்வவிநாயகா் கோயில், வண்ணாா்பேட்டை அருள்மிகு பேருந்து விநாயகா் கோயில், அருள்மிகு பேராத்துசெல்வியம்மன் ஆகியவற்றிலும் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். வீடுகளில் இருந்து பல லட்சம் மதிப்பில் புதிய ரூபாய் நோட்டுகளை கோயில்களில் அம்மன் அலங்காரத்துக்காகக் கொடுத்து அதன்பின்பு பூஜை முடிந்ததும் வாங்கிச் சென்றனா்.
திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள சன்னியாசி கிராமம் அலமேலுமங்கை சமேத வெங்கடேசபெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றன. திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயில், கொக்கிரகுளத்தில் உள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ண பெருமாள் கோயில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள கரியமாணிக்கபெருமாள் கோயில், சி.என்.கிராமத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில், தச்சநல்லூரில் உள்ள வெங்கடாஜலபதி கோயில், மேலத்திருவேங்கடநாதபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோயில் ஆகியவற்றிலும் தமிழ்ப்புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருநெல்வேலி கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சனேயா், கனகமகாலட்சுமி கோயிலில் ஆரஞ்சு, ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளால் சுவாமிக்கு பழக்காப்பு மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.