தாய் மீது பாட்டிலை வீசினார் அன்புமணி: கண்கலங்கிய ராமதாஸ்!
கட்சிக்குள் நிலவிய பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய தாயின் மீதே அன்புமணி பாட்டிலை வீசினார் என்று பாமக நிறுவனரும் அவரின் தந்தையுமான ராமதாஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சிக்குள் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே நிலவி வந்த உள்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ளது.
கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை அதிரடியாக நீக்கிய ராமதாஸ், அவரை செயல் தலைவராக நியமனம் செய்தார்.
இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய அன்புமணிக்கு பதிலளிக்கும் விதமாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசினார்.
அப்போது, அன்புமணி அவரது தாய் சரஸ்வதியை தாக்கியது தொடர்பாக ராமதாஸ் கண்கலங்கியபடி பேசினார்.
அவர் பேசியதாவது:
”அனைவரும் பெற்ற தாயை கடவுள் என்போம். இந்தாண்டு பொங்கல் சமயத்தில் குடும்பத்துடன் அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது உனது இரண்டாவது மகளை இளைஞர் அணி தலைவராக்கி இருந்தால் நீ சும்மா தானே இருந்திருப்பாய்? என அன்புமணியின் தாயார் கேட்டார்.
அப்போது, அமர்ந்திருந்த இடத்தில் இருந்த பாட்டிலை தூக்கி பெற்ற தாயின் மீது வீசியவர் அன்புமணி. நல்ல வேலையாக அது அவரின் மேல் படாது சுவற்றில் பட்டது. இதெல்லாம் வெறும் சாம்பிள்தான்” எனத் தெரிவித்தார்