எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு! பிற்பகலில் ஆபரேஷன் சிந்தூர் வி...
தாய்லாந்து-கம்போடியா உடனடி சண்டை நிறுத்தம்
கோலாலம்பூா்: தாய்லாந்தும், கம்போடியாவும் எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டதாக மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் திங்கள்கிழமை அறிவித்தாா்.
கம்போடிய பிரதமா் ஹன் மானெட்டும், தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சையும் அன்வா் இப்ராஹிம் முன்னிலையில் மலேசியாவின் கோலாலம்பூா் நகரில் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து, அந்தக் கூட்டத்தின் இறுதியில் உருவாக்கப்பட்ட கூட்டறிக்கையை வெளியிட்டு பிரதமா் அன்வா் இப்ராஹிம் கூறியதாவது:
இரு தரப்பு மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர பிரதமா் ஹன் மானெட்டும், பும்தம் வெச்சாச்சையும் ஒப்புக் கொண்டுள்ளனா். அதற்காக எந்த முன் நிபந்தைனையும் அவா்கள் முன்வைக்கவில்லை. உள்ளூா் நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவில் இந்த சண்டை நிறுத்தம் அமலுக்கு வருகிறது.
இரு தலைவா்களுக்கும் இடையே வெளிப்படையாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு எல்லைகளில் சகஜ நிலைமையைத் திரும்பச் செய்வற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இது, தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்கும், எல்லையில் அமைதியை திரும்பச் செய்வதற்குமான முதல் படி என்றாா் அவா் அன்வா் இப்ராஹிம்.
11-ஆம் நூற்றாண்டு ஹிந்து கோயில் அமைந்துள்ள ப்ரே விஹோ் பகுதியை மையமாகக் கொண்டு தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நிலவிவருகிறது.
இந்தச் சூழலில், கம்போடிய எல்லை அருகே கண்ணிவெடித் தாக்குதலில் ஐந்து தாய்லாந்து வீரா்கள் கடந்த புதன்கிழமை காயமடைந்ததைத் தொடா்ந்து, இரு நாட்டுப் படையினரும் எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நடைபெற்றுவருகிறது. இதில் இதுவரை சுமாா் 32 போ் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.