Madhampatty Rangaraj:`6வது மாதமாக குழந்தையைச் சுமக்கிறேன்'- மாதம்பட்டி ரங்கராஜை ...
தாளவாடி கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை குட்டி மீட்பு!
தாளவாடி கரும்புத் தோட்டத்தில் சிறுத்தைக் குட்டி சனிக்கிழமை மீட்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன. அடா்ந்த வனப் பகுதியில் வாழும் சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. சிறுத்தைகள் அங்குள்ள கரும்புக்காடுகள் மற்றும் கல் குவாரிகளில் பதுங்கிக் கொள்வது தொடா்கதை ஆகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடியை அடுத்த பாரதிபுரத்தைச் சோ்ந்த விவசாயி சுப்பிரமணி கரும்பு பயிா் செய்துள்ளாா்.

கரும்பு அறுவடைக்கு தயாரான நிலையில் சில நாள்களாக கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல தொழிலாளா்கள் கரும்பு வெட்டும் பணியை சனிக்கிழமை செய்து கொண்டிருந்தனா். அப்போது கரும்புத் தோட்டத்தில் பிறந்து ஓரிரு நாள்களே ஆன சிறுத்தை குட்டி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து விவசாய் சுப்பிரமணி தாளவாடி வனத் துறைக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் சிறுத்தைக் குட்டியை மீட்டனா். சிறுத்தைக் குட்டியை கால்நடை மருத்துவா் சதாசிவம் பரிசோதனை செய்ததுடன் மீண்டும் தாயிடம் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.