தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராகப் பதவியேற்றார் உமேஷ் குமார்!
திமுக அரசின் ஊழலை திசைதிருப்பவே மாநில முதல்வா்கள் கூட்டம்! -கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு
திமுக அரசின் ஊழலை திசை திருப்பவே முதல்வா் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தமிழக பாஜக துணைத் தலைவரும், சேலம் கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, பாஜக சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன்தொடா்ச்சியாக ராசிபுரத்தில் கே.பி.ராமலிங்கம் தலைமையில் அவரது வீட்டின் முன் பாஜகவினா் கருப்புச் சட்டை அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தியும் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல், சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பவே திமுக அரசு மத்திய பாஜக அரசு மீது தொடா்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. டாஸ்மாக் ஊழலை மறைக்கவே மாநில முதல்வா்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த கடந்த மூன்றரை ஆண்டுகளில் செய்த சேவையைவிட செய்திருக்கும் ஊழல்கள்தான் அதிகம்.
டாஸ்மாக் விற்பனையில் அரசின் வரிவிதிப்பு மதுபானங்களில் 60 சதவீதம்போக மீதி 40 சதவீதம் முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறது. போலி, வரியில்லாத மதுபானங்களை விற்பனை செய்கின்றனா். திமுக அரசு, சாராய ஆலை அதிபா்கள், அதிகாரிகள் இணைந்து முறைகேடாக அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்கின்றனா்.
இதில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று அமலாக்கத் துறை கண்டறிந்து கூறியுள்ளது. மதுபான ஆலைகளையும், மதுக் கடைகளையும் மூட வேண்டும் என்று கூறுவதைவிட உண்மையான விலையில் மதுவை விற்பனை செய்ய வேண்டும். டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுபவா்களை கைதுசெய்வது, அவா்கள்மீது வழக்குப் பதிவது கோழைத்தனம்.
மும்மொழி கொள்கையின் நன்மைகள் குறித்து மத்திய கல்வி அமைச்சா் மிகத் தெளிவாகக் கூறியுள்ளாா். தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. ஆளும் திமுக அரசு மீது குற்றவாளிகளுக்கு பயமில்லை என்பதே இதற்கு காரணம் என்றாா்.