விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
நகைச்சுவைப் பேச்சாளருக்கு எதிர்ப்பு: ஹோட்டலை சூறையாடிய சிவசேனை கட்சியினர்!
மும்பையில் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்து பேசியதால் நகைச்சுவைப் பேச்சாளர் குணால் கம்ரா நிகழ்ச்சி நடத்திய ஹோட்டல் மீது சிவசேனை கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
மகாராஷ்டிரத்தில் பாஜகவைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக சிவசேனை கட்சியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவி வகிக்கிறார்.
இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்யும் விதமாக பிரபல நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா பேசிய நிலையில் அவர் நிகழ்ச்சி நடத்திய ஹோட்டல் மீது சிவசேனை கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மும்பையின் கார் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அவரது நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. ’நயா பாரத்’ என பெயரிடப்பட்ட அந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் தற்போதைய அரசியல் குறித்து குணாள் கம்ரா பேசினார். அதில், ஷிண்டே சிவசேனை கட்சியை இரண்டாகப் பிரித்து பாஜகவுடன் கூட்டணி வைத்ததை விமர்சித்த குணாள் கம்ரா, ஷிண்டேவை துரோகி எனக் கூறினார்.
இதையும் படிக்க | புல்லட் ரயில் கட்டுமான தளத்தில் விபத்து: 25 ரயில்கள் ரத்து!
மேலும், ஷிண்டேவை கேலி செய்யும் விதமாக அவரது பெயரைக் குறிப்பிடாமல் அவரது தோற்றத்தை மட்டும் குறிப்பிட்டு ’தானேவிலிருந்து ஒரு தலைவர்’ என்ற பாடலை பாடி அதனை தனது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தார் குணாள் கம்ரா.
இதனால், கோபமடைந்த சிவசேனை கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கம் இருக்கும் ஹோட்டலை சூறையாடினர். அங்கிருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்திய நிலையில், குணாள் கம்ராவை கைது செய்யுமாறு போலீஸில் புகாரளித்துள்ளனர்.
குணாள் கம்ராவுக்கு சர்ச்சைகள் புதிதானது அல்ல. அவரது அரசியல் நகைச்சுவை நிகழ்ச்சிகள் தொடர்பாக பலமுறை அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | கனடாவில் தேர்தல்: பதவியேற்ற 10 நாள்களில் நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர்!
அவருடைய யூடியுப் சேனலில் பல அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள் என பலரைப் பற்றி நகைச்சுவையாக அவர் பேசும் விடியோக்கள் உள்ளன. ஆனால் இந்தமுறை அதற்கான எதிர்ப்பு மிகவும் மோசமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
”சிவசேனை கட்சியினரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்பது எங்கு இருக்கிறது?” என சிவசேனை (யுபிடி) கட்சித் தலைவர் ஆதித்யா தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.