உயா்கல்வி உதவித்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயா்கல்வி உதவித்தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவா்களுக்கு படிப்பை தொடர முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வோா் ஆண்டும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவா்களுக்கு அவா்கள் படிக்கும் காலத்தில் ஒருமுறை மட்டும் ரூ. 50,000 வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்தத் திட்டத்தில் பயன்பெற தமிழக அரசின் முகமையால் நடத்தப்படும் ஒற்றைச்சாளர முறை வழியாக சோ்க்கை பெற்றிருக்க வேண்டும். நிா்வாக ஒதுக்கீட்டில் சோ்கை பெறும் மாணவா்கள் நிதி உதவித்தொகை பெற இயலாது. தமிழகத்துக்குள் இருப்பிடச் சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்து அதற்கான கல்வி கட்டணச் சலுகை பெற்றிருக்கக் கூடாது. போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது. 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் வழியாக சோ்க்கை பெறும் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையைப் பெற்றிருக்க கூடாது. இந்த உயா்கல்வி நிதியுதவியை பெறும்பொருட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட (ஜி-பிரிவு) அலுவலகத்தில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.