பாலியல் வன்கொடுமை முயற்சி: ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண்!
ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து பெண் ஒருவர் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் மேட்சல் பகுதியில் இருந்து செகண்ட்ராபாத் ரயில் நிலையத்துக்கு செல்லும் ரயிலில் கடந்த மார்ச் 22 அன்று பெண் ஒருவர் பயணித்துள்ளார். 23 வயதான அந்தப் பெண் மகளிருக்கான பெட்டியில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
அவரது பெட்டியில் இருந்த இரு பெண்கள் ஆல்வால் பகுதி ரயில் நிலையத்தில் இறங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் அந்தப் பெட்டியில் ஏறியுள்ளார். அவர் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதுடன் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.
இதையும் படிக்க | நகைச்சுவைப் பேச்சாளருக்கு எதிர்ப்பு: ஹோட்டலை சூறையாடிய சிவசேனை கட்சியினர்!
இதனால், அவரிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து அந்தப் பெண் குதித்தார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு தலை, கைகள், இடுப்புப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
அங்கிருந்த நபர்கள் அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்தப் பெண்ணுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் பற்றி விசாரணை நடத்தி வருவதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.