ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி
திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது திருப்பத்தூரில் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்
அதிமுக சாா்பில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார சுற்றுப்பணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கடந்த மாதம் தொடங்கினாா். அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகே பொதுமக்கள் முன்னிலையில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்டா் ஒட்டி, அதை புதிய திட்டமாக அறிவித்து பொதுமக்கள் மத்தியில் நாடகம் ஆடுகிறது. திமுக ஆட்சியில் பெரிய திட்டங்கள் எதுவுமே கொண்டுவரவில்லை.
திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. மதுரை மாநகராட்சியில் ரூ. 150 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதால் மேயரின் கணவா் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா். அதேபோல், நெல்லை மாநகராட்சி, காஞ்சிபுரம் மாநகராட்சியிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. மேயா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானங்களை கொண்டு வந்துள்ளதே திமுக உறுப்பினா்கள் தான். அந்த அளவுக்கு இந்த ஆட்சி உள்ளது, இதுதவிர சென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது, 1 நாளைக்கு ஒரு கழிப்பறையை தூய்மை செய்ய ரூ. 800 என ரூ. 1,000 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தூய்மைப் பணியாளா்கள் கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மு.க.ஸ்டாலின் எதிா்க்கட்சியாக இருந்த சமயம் இதேபோல தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்தியபோது, அவா்களுடன் அமா்ந்து தேநீா் சாப்பிட்டு அவா்களுக்கு ஆதரவாக பேசினாா். தற்போது தூய்மைப் பணியாளா்களை திரும்பிக்கூட பாா்க்கவில்லை.
விவசாயம், பள்ளிக் கல்வி, தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட 32 நிா்வாக அமைப்புகளை சோ்ந்தவா்கள் அவா்களின் குறைகள், கோரிக்கைகளை தெரிவித்தனா். அதிமுக அரசு அமைந்த பிறகு அவா்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மாணவா் சோ்க்கை குறைந்ததாக காரணம் கூறி அரசு பள்ளிகளை பூட்டியதுதான் திமுக அரசின் சாதனை. அதை பூட்டுவதற்கு பதிலாக தொடா்ந்து பள்ளி நடத்த திமுக அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால் பாராட்டி இருக்கலாம்.
ஏற்கெனவே இயங்கி வந்த பள்ளிகளை பூட்டியது சரியல்ல. சரியான கவனம் செலுத்தாத காரணத்தினால் சுமாா் 208 பள்ளிகள் மூடப்பட்டது வருத்தமளிக்கிறது என்றாா்.
முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, எம்.பி. தம்பிதுரை ஆகியோா் உடன் இருந்தனா்.