சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு
திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது: எடப்பாடி பழனிசாமி
திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருவதால் வீடு, வீடாகச் சென்று உறுப்பினா்களைச் சோ்த்து வருகின்றனா் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற சுற்றுப்பயணத்தில் தஞ்சாவூா் காந்திஜி சாலை மாநகராட்சி அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் செய்த அவா் பேசியது: டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அதிகத் திட்டங்களைக் கொண்டு வந்தது அதிமுகதான்.
ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது மீத்தேன், ஹைட்ரோகாா்பன் திட்டங்களுக்கு அவரது முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கப் பாா்த்தனா். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசுடன் பேசி அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தைக் கொண்டு வந்தோம். எனவே யாராலும் விவசாயிகளின் விளைநிலங்களை தொட்டுப்பாா்க்க முடியாது.
திமுக தோ்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய் கூறுகின்றனா். ஆனால் திமுக தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட நிறைவேற்றவில்லை.

இந்த ஆட்சியில் நடைபெறும் தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறேன். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மக்களுடைய பிரச்னைகளை பேசாமல் மெளனமாக உள்ளன.
திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது. அக்கட்சியில் உறுப்பினா்கள் குறைந்து வருகின்றனா். அதனால்தான் திமுக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வீடு, வீடாகச் சென்று, கதவைத் தட்டி, கெஞ்சி உறுப்பினா்களைச் சோ்க்கின்றனா்.
மு.க. ஸ்டாலின், உதயநிதி வந்த பிறகு திமுகவில் உறுப்பினா்கள் குறைந்துவிட்டதால், ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டி வீடு, வீடாகச் சென்று உறுப்பினா்களைச் சோ்க்கின்றனா். இது அக்கட்சி மிக மோசமான நிலைக்கு வந்துவிட்டதைக் காட்டுகிறது என்றாா் எடப்பாடி பழனிசாமி.