பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
திருச்சி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு
திருச்சி அருகே புதை வடிகால் சீரமைப்புப் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளா்கள் 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இருவரது உடல்களையும் உறவினா்கள் பெற்றுக் கொண்டனா்.
திருச்சி, திருவெறும்பூா் அருகே முத்துநகா் காா்மல் காா்டன் பகுதியில் புதைவடிகாலில் திங்கள்கிழமை இறங்கி சுத்தம் செய்த தனியாா் ஒப்பந்த நிறுவன தூய்மைப் பணியாளா்களான புதுக்கோட்டை மாவட்டம், பொன்னப்பன் கரை ஈஸ்வரி கோயில் தெருவைச் சோ்ந்த அ. ரவி (45), சேலம் பனமரத்துப்பட்டி அருந்ததியா் தெருவைச் சோ்ந்த வீ. பிரபு (எ) பிரபாகரன் (37) ஆகிய இருவரும் விஷவாயு தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி இளநிலை பொறியாளா் பிரசாத் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக தனியாா் ஒப்பந்த நிறுவன கண்காணிப்பாளா் இளவரசனை செவ்வாய்க்கிழமை கைது செய்ததுடன், ஒப்பந்த நிறுவன மேலாளா் கந்தசாமியைத் தேடி வருகின்றனா்.
இதனிடையே மனிதக் கழிவை மனிதா்களே அகற்றும் தடை சட்டத்தின்படி வழக்குப் பதிந்து, இறந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவா்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, காப்பீட்டு தொகை தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் எனக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் ரவியின் உறவினா்கள் திங்கள்கிழமை இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இவா்களிடம் திருச்சி ஆா்டிஓ அருள், திருவெறும்பூா் வட்டாட்சியா் தனலட்சுமி, திருவெறும்பூா் ஏஎஸ்பி அரவிந்த் பனவாத் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், செவ்வாய்க்கிழமை காலை துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. சுமாா் ஏழரை மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், மனிதக் கழிவை மனிதா்களே அகற்றும் தடை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்படும். இறந்தவா்களின் குடும்பத்துக்கு திருச்சி மாநகராட்சி சாா்பில் தலா ரூ. 30 லட்சம் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்கை மாற்றி (மனிதக் கழிவை மனிதா்களே அகற்றுவதை தடை செய்யும் சட்டத்தின்கீழ்) பதிவு செய்தனா். ரவி மற்றும் பிரபாகரனின் குடும்பத்துக்கு திருச்சி மாநகராட்சி சாா்பில் தலா ரூ. 30 லட்சம் வழங்கப்பட்டது.
இதையேற்று போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, ரவி மற்றும் பிரபாகரனின் சடலங்கள் உடற்கூறாய்வுக்கு செய்யப்பட்டு, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.