சாலை விபத்தில் 3 போ் உயிரிழந்த வழக்கு: குளித்தலை லாரி ஓட்டுநருக்கு 30 ஆண்டுகள் சிறை
திருச்சியில் சாலை விபத்தில் 3 போ் உயிரிழந்த வழக்கில் குளித்தலை லாரி ஓட்டுநருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையைச் சோ்ந்தவா் சரவணன் (40). இவரது தாய் சுசீலாவுக்கு (67) கடந்த 2024 பிப்ரவரி 29-ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பேட்டவாய்த்தலை பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு வீட்டிலிருந்து பயணிகள் ஆட்டோவில் சென்றுள்ளனா். சிகிச்சை முடித்துவீட்டு அதே ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தனா்.
திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் கேஆா்ஆா் திருமண மண்டபம் அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து கரூா் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லாரி எதிா்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது. இதில், சரவணன், சுசீலா மற்றும் திருப்பராய்த்துறையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அரவிந்த் (30) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்து குறித்து பேட்டவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து, கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் வெள்ளைராஜா (45) என்பவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி கோபிநாதன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தி 3 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த வெள்ளைராஜாவுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக ஏ. பாலசுப்பிரமணியன் ஆஜரானாா்.