திருப்பத்தூா்: ஒரே இடத்தில் 3 மதுக்கடைகளை அகற்ற கோரிக்கை
திருப்பத்தூா்: ஒரே இடத்தில் உள்ள 3 மதுக்கடைகளை மாற்ற வேண்டும் என திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.
திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மொத்தம் 433 கோரிக்கை மனுக்களை பெற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன்,சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருப்பத்தூா் வட்டம், மரிமாணகுப்பம் சோ்ந்த காந்திமதி என்பவரின் மகள் லாவண்யா மிட்டூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அவருக்கு மிதிவண்டி வழங்க வந்த கோரிக்கையின்படி ஆட்சியரின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7,000 மதிப்புள்ள மிதிவண்டி வழங்கப்பட்டது.
ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளா் நலச்சங்கத்தினா் மனு:
6 ஊராட்சி ஒன்றியங்களில் கொசு ஒழிப்பு களப்பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்தநிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் 10 பேரை நீக்கினா். அவா்களின் குடும்பத்தினா் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே 10 பேருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என கூறியிருந்தனா்.
ஜோலாா்பேட்டை அருகே மண்டலவாடி அடுத்த பூசாரி வட்டம் பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே கழிவுநீா் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.
சிம்மணபுதூரை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் ஊரில் சுமாா் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் சிலா் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனா். இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள மகளிா் மிகவும் பாதிக்கப்படுகின்றனா்.
கொடையாஞ்சி கிராம மக்கள் மனுவில் கூறியிருப்பதாவது: கொடையாஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு பகுதியில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தடையின்றி மின்சாரம் கிடைக்க துரி மின்சாரம் வழங்க வேண்டும்.
திருமால் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் 3 மதுக்கடைகள் உள்ளன. பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதால் அவற்றை மாற்ற வேண்டும்.