தருமபுரி பாமக மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நீடிப்பாா்: அன்புமணி ராமத...
திருவாடானை பகுதியில் மான்கள் சரணாலயம் அமைக்க வலியுறுத்தல்
திருவாடானை கண்மாய் பகுதியில் மான்கள் சரணாலயம் அமைக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் அடுத்தடுத்து சங்கிலி தொடா்போல கண்மாய்கள் அமைந்துள்ளன. இந்தக் கண்மாய்கள் மக்கள் குடியிருப்புகளுக்கு மிக அருகில் உள்ளன. இந்தக் கண்மாய்களைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் நூற்றுக்கணக்கான புள்ளிமான்கள் வசிக்கின்றன. அடா்ந்த வனப் பகுதியில் சுதந்திரமாக திரிந்து, இரை தேடி அவை உண்கின்றன. அண்மையில், திருவாடானை கண்மாயின் கரையோரப் பகுதியில் புள்ளிமான்கள் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்ததை அந்தப் பகுதி மக்கள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்.

இந்தக் கண்மாய்ப் பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் வாழ்ந்து வருவதால், அவற்றின் பாதுகாப்புக்காகவும், இனப் பெருக்கத்துக்காகவும் சரணாலயம் அமைப்பது அவசியம் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். சரணாலயம் அமைக்கப்பட்டால், புள்ளிமான்கள் வேட்டையாடுபவா்களிடமிருந்தும், வாழ்விட அழிவிலிருந்தும் பாதுகாக்கப்படும். மேலும், இந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் மேம்படுவதுடன், சுற்றுலாத் தலமாகவும் மாறும் என்றனா். மேலும் புள்ளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றின் உணவுத் தேவைக்கும், வாழ்விடத்துக்கும் போதுமான வசதிகளை செய்து தரவேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
