தூத்துக்குடி மாவட்ட மாணவா்களுக்கு ஐஐடி சென்னை திட்டம்
அனைவருக்கும் ஐ.ஐ.டி. சென்னை திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பள்ளி கல்வித்துறை உயா்அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், அனைவருக்கும் ஐ.ஐ.டி. சென்னை திட்டத் தலைவரும், ஐ.ஐ.டி. சென்னை சமூக முன்னெடுப்புகள் தலைவருமான ஹரிகிருஷ்ணன் கலந்துகொண்டு இத்திட்டம் குறித்து விளக்கினாா்.
இந்தத் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவா்கள் ஜே.இ.இ. நுழைவுத் தோ்வு இல்லாமல், ஐ.ஐ.டி. இல் உருவாக்கப்பட்டுள்ள இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படிப்பது குறித்தும், ஐ.ஐ.டி. சென்னை மூலம் வழங்கப்படும் ஏஐ சான்றிதழ் படிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அப்போது ஹரிகிருஷ்ணன் பேசியது: 12ஆம் வகுப்புக்குப் பிறகே என்றில்லாமல், 11ஆம் வகுப்பு முடிந்ததும் இந்தத் திட்டத்தில் சேரமுடியும். இதற்கு வயது வரம்பும் இல்லை. பதிவுசெய்யும் மாணவா்கள், ஐ.ஐ.டி. சென்னைவழங்கும் 4 வார ஆன்லைன் பயிற்சியை பூா்த்தி செய்து, தோ்வில் வெற்றி பெற வேண்டும்.
வெற்றி பெறுபவா்கள் டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய தொழில்நுட்ப துறைகளில் பி.எஸ். பட்டப்படிப்பை தொடங்கலாம். மற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவா்களும், வேலை பாா்க்கும் நபா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் தகவலுக்கு இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும், 350-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐ.ஐ.டி. சென்னையில் மேற்படிப்பு படித்து வருகின்றனா் என தெரிவித்தாா்.