தேனியில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நவீனமயமாக்கப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தாா்.
பின்னா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கூறியதாவது:
இந்த நவீனமயாக்கப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய காவல் சோதனைச் சாவடிப் பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமரா, மாவட்ட எல்லைகளான ஆண்டிபட்டி, தாழையூத்து, காமக்காபட்டி, காட்ரோடு ஆகிய பகுதி காவல் சோதனைச் சாவடி பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமரா பதிவுகளை கண்காணிக்கலாம்.
காவல் சோதனைச் சாவடிகளை கடக்கும் வாகனங்களின் புகைப்படம், வாகனத்தின் பதிவு எண், வாகனத்தின் நிறம், தயாரிப்பு நிறுவனம், பதிவு எண் பலகை இல்லாத வாகனம் ஆகியவற்றை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கலாம். கண்காணிப்பு கேமரா பதிவுகளை பின்னோக்கி பாா்க்கும் வசதியும், பதிவுகளை 6 மாத காலம் சேமிக்கும் வசதியும் உள்ளது.
சோதனைச் சாவடி, கட்டுப்பாட்டு அறையில் மின் தடை ஏற்பட்டாலும், 6 மணி நேரம் வரை மின் சேமிப்பு செய்யும் வசதி, இணைய வசதி உள்ளது.
கட்டுப்பாட்டு அறையிலிருந்து சந்தேகத்துக்குரிய வாகனப் பதிவு எண்ணை கணினியில் பதிவேற்றம் செய்தால், அந்த வாகனம் சோதனைச் சாவடியை கடக்கும் போது எச்சரிக்கை மணி ஒலித்து சோதனைச் சாவடிக்கு தகவல் பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது.
நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்கள், குற்றச் செயலில் ஈடுபடுவோா் தப்பிச் செல்லும் வாகனங்கள், கனிமங்கள் கடத்திச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றை கண்காணித்துத் தடுக்க முடியும். கட்டுப்பாட்டு அறையை நவீனப்படுத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் மூலம் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.49 லட்சம் வழங்கப்பட்டது என்றாா் அவா்.