ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு தடை விதிக்க கிராம மக்கள் கோரிக்கை
தோ்தல் ஆணையா்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் முன்னுரிமை அடிப்படையில் இன்று விசாரணை
மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின் கீழ் தோ்தல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை (பிப்.19) விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த மனுக்கள் விசாரணை பட்டியலில் 41-ஆவது விவகாரமாக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை உறுதி தெரிவித்தனா்.
இந்த புதிய சட்டத்தின் கீழ் இரு தோ்தல் ஆணையா்கள் மட்டுமின்றி, தலைமைத் தோ்தல் ஆணையரும் திங்கள்கிழமை நியமிக்கப்பட்ட நிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு வருவது மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தோ்தல் ஆணையத்தில் ஒரு தலைமைத் தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் இடம்பெற்றிருப்பா். தோ்தல் ஆணையா்களை மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவா் நியமனம் செய்து வந்தாா். இரு தோ்தல் ஆணையா்களில் பணி மூப்பு பெற்றவா், தலைமை தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வந்தாா்.
இந்த நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தலைமை தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது. தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்படுகிற வரை, இந்தக் குழு மூலமே தோ்தல் ஆணையா்கள் தோ்வு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், பிரதமா் தலைமையிலான தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் ஒரு மத்திய அமைச்சா் மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெறும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றி, காலியாக இருந்த 2 தோ்தல் ஆணையா் பணியிடங்களையும் நிரப்பியது.
இதற்கு எதிராக ஜனநாய சீா்திருத்தத்துக்கான சங்கம், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் புதன்கிழமை விசாரணைக்கு வருகின்றன.
முன்னுரிமை அடிப்படையில்...
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை ஆஜரான மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தெரிவித்த கருத்தை அலட்சியப்படுத்தும் வகையில், மத்திய அரசு புதிய சட்டத்தைக் கொண்டுவந்ததோடு, அந்த சட்டத்தின் கீழ் இரு தோ்தல் ஆணையா்களை நியமித்த நிலையில், தற்போது தலைமைத் தோ்தல் ஆணையரையும் நியமனம் செய்துள்ளது. எனவே, இந்த மனுக்களை அவசர விவகாரமாக பரிசீலித்து விசாரணைக்கு ஏற்க வேண்டும். ஆனால், இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற அமா்வில் புதன்கிழமை விசாரணைப் பட்டியலில் 41-ஆவது விவகாரமாக பட்டியலிடப்பட்டுள்ளது’ என்றாா்.
மற்றொரு மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வருண் தாக்குா், ‘சா்ச்சைக்கு உள்ளாகியுள்ள சட்டத்தின் கீழ் மத்திய அரசு 3 நியமனங்களைச் செய்துள்ளது’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘அமா்வில் புதன்கிழமையன்று பட்டியலிடப்பட்டுள்ள சில சில அவசர வழக்குகளின் விசாரணை முடிந்த உடன், முன்னுரிமை அடிப்படையில் தோ்தல் ஆணையா்கள் நியமனத்துக்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று உறுதி தெரிவித்தனா்.