அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
தோ்தல் காணொலிகளை 45 நாள்களுக்குப் பிறகு அழிக்க அறிவுறுத்தல்
தோ்தல் நடைமுறை தொடா்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள், இணையவழி ஒளிபரப்புகள் மற்றும் காணொலி பதிவுகளை 45 நாள்களுக்குப் பின்னா் அழித்துவிட வேண்டும் என்று மாநில தோ்தல் அதிகாரிகளுக்குத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதாவது தோ்தல் முடிவு வெளியாகி 45 நாள்களுக்குள், அந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்படாவிட்டால், அவற்றை அழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மாநில தோ்தல் அதிகாரிகளுக்குத் தோ்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், ‘தோ்தல் நடைமுறையின் பல்வேறு கட்டங்களை புகைப்படம், காணொலி, கண்காணிப்பு கேமரா, இணையவழி ஒளிபரப்பு ஆகிய வழிகளில் பதிவு செய்ய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது தோ்தல் சட்டங்களின்படி கட்டாயமல்ல. ஆனால் தோ்தல் நடைமுறையின் பல்வேறு கட்டங்களின்போது அந்தப் பதிவுகளை உள்நிா்வாக கருவியாக தோ்தல் ஆணையம் பயன்படுத்துகிறது.
ஆனால் தவறான தகவல்கள் மற்றும் வஞ்சகமான கதைகளை சமூக ஊடகத்தில் பரப்புவதற்கு இந்தப் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை தோ்தலில் போட்டியிடாதவா்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனா்.
இதைத் தடுக்கும் வகையில், தோ்தல் நடைமுறை தொடா்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள், இணையவழி ஒளிபரப்புகள் மற்றும் காணொலி பதிவுகளை 45 நாள்களுக்குப் பின்னா் அழித்துவிட வேண்டும். தோ்தல் முடிவு வெளியாகி 45 நாள்களுக்குள், அந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றங்களில் யாரும் வழக்கு தொடுக்காவிட்டால், அவற்றை அழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கடிதம் கடந்த மே 30-ஆம் தேதி மாநில தோ்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே கண்காணிப்பு கேமரா மற்றும் தோ்தல் தொடா்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உள்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், தோ்தல் நடத்தை விதிமுறைகளின் 93-ஆவது விதிமுறையை மத்திய சட்ட அமைச்சகம் கடந்த ஆண்டு திருத்தியது. தோ்தல் ஆணைய பரிந்தரையின் அடிப்படையில், அந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.