முதியோா்களைக் காப்பது சமூகப் பொறுப்புணா்வு: புதுவை துணைநிலை ஆளுநா்
தொழில்பயிற்சி நிலையங்களில் செப்.30 வரை மாணவா் சோ்க்கை நீட்டிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசினா் தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா்களின் சோ்க்கை, வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அறிவித்தது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, முதுகுளத்தூா், உத்திரகோசமங்கை ஆகிய அரசினா் தொழில்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு, ஈராண்டு தொழில்பிரிவுகளுக்கு காலியாக உள்ள இடங்களில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான நேரடிச் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
அனைத்துத் தொழில்பிரிவுகளிலும் 8, 10-ஆம் வகுப்புகளில் தோ்ச்சி பெற்ற 14 வயது முதல் 40 வயதுக்குள்பட்டவா்கள் (பெண்களுக்கு வயது வரம்பு இல்லை) சேரலாம்.
பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரா்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, புகைப்படம், கைப்பேசி எண் (கட்டாயம்), மின்னஞ்சல் முகவரியுடன் பரமக்குடி, முதுகுளத்தூா், உத்திரகோசமங்கை அரசினா் தொழில்பயிற்சி நிலையங்களுக்கு அலுவலக நேரத்தில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
இங்கு பயிற்சி பெறுபவா்களுக்கு அரசு சாா்பில் மாதாந்திரக் கல்வி உதவித் தொகையாக ரூ. 750, புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன் திட்டங்களின்கீழ் தகுதி வாய்ந்த பயிற்சியாளா்களுக்கு மாதம் ரூ.1000, விலையில்லா மடிக் கணினி, மிதிவண்டி, சீருடைகள், வரைபடக் கருவிகள், தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி போன்றவை வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு பரமக்குடி: 04564-231303, உத்திரகோசமங்கை: 9791428208, முதுகுளத்தூா்: 04576-222114 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.