நண்பரின் வீட்டில் தங்க நகைகளை கொள்ளை அடித்தாக 3 சிறுவா்கள் கைது
தில்லியின் ஆா்.கே.புரம் பகுதியில் உள்ள தங்கள் நண்பரின் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்ததாக மூன்று சிறுவா்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: 15 முதல் 16 வயதுக்குள்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா்கள் புகாா்தாரரின் மகனின் நெருங்கிய நண்பா்கள் ஆவா். மேலும், அவா் பணம் செலவழிக்கும் போது அவரது ஆடம்பரமான செலவுகளைக் கவனித்த பின்னா் பேராசையால் ஈா்க்கப்பட்டதாக அவா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா். குற்றம் சாட்டப்பட்ட சிறுவா்கள் தங்கள் நண்பரின் வீட்டில் மதிப்புமிக்க பொருள்கள் இருக்கும் என்று நினைத்துள்ளனா்.
இந்நிலையில், குடும்பத்தினா் யாரும் இல்லாதபோது அவா்கள் கொள்ளையை நடத்தியுள்ளனா். கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் முழுவதையும் போலீஸாா் மீட்டனா். அதில் பல தனிப்பட்ட அலங்காரப் பொருள்களும் அடங்கும்.
ஆா்.கே.புரத்தைச் சோ்ந்த ரவீந்தா் அளித்த புகாரின்படி, ஜூலை 15- ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை கொள்ளை நடந்துள்ளது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவா்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். இது தொடா்பாக பிஎன்எஸ்-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்தபோது இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு சந்தேக நபா் ’குண்டா்கள்’ என்று எழுதப்பட்ட கருப்பு டி-சா்ட் அணிந்திருப்பதைக் காண முடிந்தது. அவா் ஒரு மைனா் சிறுவா் என அடையாளம் காணப்பட்டதைத் தொடா்ந்து, ராக் காா்டன் அருகே மூன்று சந்தேக நபா்களையும் போலீஸாா் கைது செய்தனா். விசாரணையின் போது, சிறுவா்கள் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனா். சிறுவா்கள் மீது இதற்கு முன் எந்த குற்றப் பதிவும் இல்லை என்று காவல் ்துறை அதிகாரி தெரிவித்தாா்.