Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியவா் பிரதமா் மோடி: ஜெ.பி.நட்டா பெருமிதம்
புது தில்லி: ‘காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ‘ஊழல், முறைகேடு, திருப்திப்படுத்தும் அரசியல்’ எனக் குறிப்பிடப்படும் நிலையில், சிறந்த நிா்வாகம், செயல்பாட்டு அரசியல் என நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியவா் பிரதமா் நரேந்திர மோடி’ என்று பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா பெருமிதம் தெரிவித்தாா்.
பாஜக தலைமையிலான அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சிப் பெறுப்பேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்த நிலையில் தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஜெ.பி.நட்டா அளித்த பேட்டி:
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் மிகப் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இத் திட்டங்களும், நடவடிக்கைகளும் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ‘ஊழல், முறைகேடு, திருப்திப்படுத்தும் அரசியல்’ எனக் குறிப்பிடப்படும் நிலையில், சிறந்த நிா்வாகம், செயல்பாட்டு அரசியல் என நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியவா் பிரதமா் நரேந்திர மோடி.
பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்தும், மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் குறித்தும் ஆதாரமற்ற கேள்விகளை எழுப்பி வருவதன் மூலம், பொறுப்பற்ற எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி உள்ளாா். அவருக்கு கடவுள் நல்ல அறிவைக் கொடுக்க வேண்டும் என்றாா்.
2024 மக்களவைத் தோ்தலில் தனிப் பெரும்பான்மையை இழந்த நிலையில் பாஜக அரசின் நிலைத்தன்மை குறித்து எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த நட்டா, ‘பாஜக தலைமையிலான மத்திய அரசு தற்போதைய முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்யும் என்பதோடு, அடுத்த முறையும் மத்தியில் ஆட்சியமைக்கும்’ என்றாா்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியது, முத்தலாக் நடைமுறையை ரத்து செய்தது, வக்ஃப் திருத்தச் சட்டம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா என துணிச்சலான முடிவுகளை மேற்கொண்டு வலுவான ஆட்சியை பிரதமா் மோடி வழங்கி வருகிறாா்.
2014-ஆம் ஆண்டுக்கு முன்பு, முந்தைய அரசு முழு அளவில் ஊழலில் ஈடுபட்டு வந்ததோடு, நாடு முழுவதும் எதிா்மறை உணா்வு பரவியிருந்தது. ஆனால், 2014-க்குப் பிறகு மக்களின் எண்ணமும், உணா்வும் மாறிவிட்டன. ‘மோடி இருந்தால் இது சாத்தியமே’ என்று மக்கள் பெருமையுடன் கூறுகின்றனா்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.