முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
நாட்டின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் விரைவில் தொடக்கம்!
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ.1 கோடியில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் சிறப்பு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ வெளியிட்ட செய்தி:
வனவிலங்குகளைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. நாட்டின் முதல் கடற்பசு பாதுகாப்பு சரணாலயம், நீலகிரி வரையாடு திட்டம், தேவாங்கு பாதுகாப்பு மையம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கவா்ச்சிகரமான பறவையான இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
அதன்படி, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகளின் பாதுகாப்பு சிறப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு சாா்பில் அழிந்து வரும் உயிரினப் பாதுகாப்பு நிதியின்கீழ் விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்ய ரூ.10 லட்சம், மையம் அமைப்பதற்கு ரூ.59.4 லட்சம், பறவைகளின் வாழ்விடம், இனங்கள் உள்ளிட்டவற்றைக் கணக்கிடுதல், பணியாளா்களுக்கு பயிற்சி வழங்க ரூ.12 லட்சம், பறவைகளின் வாழ்விடத்தை மதிப்பீடு செய்ய ரூ.12.6 லட்சம், வாழ்விடத்தைப் பாதுகாக்கும் தனியாா் உரிமையாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நோக்கம்: மேற்குத் தொடா்ச்சி மலையில் அதிகமாக காணப்படும் பெரிய இருவாச்சி, மலபாா் சாம்பல் இருவாச்சி, மலபாா் கருப்பு-வெள்ளை இருவாச்சி, இந்திய சாம்பல் இருவாச்சி ஆகிய 4 வகை பறவைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இந்த மையம் அமைக்கப்பட உள்ளது.
இதன்மூலம், இருவாச்சி பறவைகளின் பரவல், இனப்பெருக்கம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள முடியும். மையம் அமைக்கப்படவுள்ள பகுதிகளில் அத்திமரம், சாதிக்காய், கருங்குங்கிலியம் போன்ற பூா்வீக இருவாச்சியின் உணவு மரங்கள் வளா்க்கப்பட உள்ளன.
இந்த மையத்தைப் பராமரிக்க உதவும் உள்ளூா் மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்குதல், இருவாச்சி பறவைகள் குறித்து மாணவா்கள் கள ஆய்வு மேற்கொள்ள வழிவகை செய்தல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என அதில் தெரிவித்துள்ளாா்.