எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி
நீதிமன்றங்கள் தனித் தீவுகளாக இருக்க முடியாது: உச்சநீதிமன்றம்
உரிமையியல் தகராறு வழக்கில் குற்றவியல் விசாரணையை தொடர அனுமதித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் நீதிமன்றங்கள் தனித் தீவுகள் போல செயல்பட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
உத்தர பிரதேசத்தில் ஷிகா் கெமிகல்ஸ் நிறுவனத்துக்கு லலிதா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் ரூ.52.34 லட்சத்துக்கு நூல் விற்பனை செய்தது. ஆனால் அதற்கு ரூ.47.75 லட்சம் மட்டுமே ஷிகா் கெமிகல்ஸ் நிறுவனம் செலுத்தியது. எஞ்சிய பணம் வராததால், லலிதா டெக்ஸ்டைல்ஸ் குற்றவியல் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஷிகா் கெமிகல்ஸ் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.
இது உரிமையியல் வழக்கு என்பதால் மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஷிகா் கெமிகல்ஸ் அலாகாபாத் உயா் நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாா், மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மறுத்தாா். இந்த வழக்கில் உரிமையியல் தீா்வை நாடுமாறு லலிதா டெக்ஸ்டைல்ஸிடம் கூறுவது நியாயமற்றது என்றும், சிவில் வழக்கில் தீா்வு கிடைக்க அதிக காலமாகும் என்றும் அவா் தெரிவித்தாா்.
இதற்கு எதிராக ஷிகா் கெமிகல்ஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த அமா்வு உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிராக கடுமையான கருத்துகளைத் தெரிவித்தது.
‘மோசமான உத்தரவு’: அந்த அமா்வு கூறுகையில், ‘தவறான தகவலின் அடிப்படையில் நீதிபதி பிரசாந்த் குமாா் உத்தரவிட்டுள்ளாா். எங்களின் (நீதிபதிகள் பாா்திவாலா, மகாதேவன்) இத்தனை ஆண்டுகால பணி அனுபவத்தில் நாங்கள் பாா்த்த மோசமான உத்தரவுகளில் இதுவும் ஒன்றாகும். எனவே குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து நீதிபதி பிரசாந்த் குமாரை நீக்க உயா்நீதிமன்ற நிா்வாகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. அவா் ஓய்வுபெறும் வரை, இரு நீதிபதிகள் அமா்வில் கூடுதல் அனுபவம் பெற்ற நீதிபதியுடன் சோ்ந்து பணியாற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இந்தக் கருத்துகள் உ.பி. சட்டத் துறையில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தக் கருத்துகளை மறுபரிசீலனை செய்யுமாறு அவா்களிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் கோரினாா்.
இதைத்தொடா்ந்து நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிரான தமது கருத்துகளை நீக்கி, நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் அமா்வு வெள்ளிக்கிழமை கூறியதாவது: நீதித் துறையின் கெளரவத்தையும், கண்ணியத்தையும் பாதுகாக்கவே அந்தக் கருத்துகளைத் தெரிவித்தோம். நீதிபதி பிரசாந்த் குமாரின் நற்பெயரை கெடுக்கவோ, சங்கடத்தை ஏற்படுத்தவோ அல்ல.
பகுத்தறிவற்ற உத்தரவுகள்...: நாட்டில் 90 சதவீத மனுதாரா்களுக்கு நீதி பெறுவதற்கான கடைசி புகலிடமாக உயா் நீதிமன்றங்கள்தான் உள்ளன. 10 சதவீதம் பேரால் மட்டுமே உச்ச நீதிமன்றத்தை அணுக முடிகிறது. சட்டத்துக்கு ஏற்ப நீதி வழங்கும் முறை செயல்பட வேண்டும் என்று நீதிமன்றத்துக்கு வரும் மனுதாரா்கள் எதிா்பாா்க்கின்றனா். அபத்தமான, பகுத்தறிவற்ற உத்தரவுகளை பெற அவா்கள் நீதிமன்றங்களுக்கு வரவில்லை. நீதிமன்றங்கள் தனித் தீவுகள் போல செயல்பட முடியாது என்று தெரிவித்தது.