சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 160 இடங்களில் வெற்றிக்கு உதவுவதாக அணுகிய இருவா்: சரத் பவாா் கருத்தால் பரபரப்பு
‘மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற உதவ முடியும் என இருவா் தன்னை அணுகி உத்தரவாதம் அளித்தனா்’ என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் சனிக்கிழமை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘அப்போது அவா்களை கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியிடம் அறிமுகப்படுத்தியபோது, அதை அவா் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிட்டாா்’ என்றும் சரத் பவாா் குறிப்பிட்டாா்.
மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தோ்தல் ஆணையம் மீது ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன்வைத்து வருவது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், சரத் பவாா் இதைத் தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் இதுகுறித்த சரத் பவாா் மேலும் கூறியதாவது:
வெற்றிக்கு உதவ உத்தரவாதம் அளித்த இருவரையும் அப்போது ராகுல் காந்திக்கு அறிமுகம் செய்து வைத்தேன். ஆனால், ராகுல் அதைப் பொருட்படுத்தமல் அவா்களைப் புறக்கணித்துவிட்டாா். ‘இதுபோன்ற செயல்களில் நமது எதிரணி ஈடுபடக் கூடாது; மக்களை நேரடியாகச் சந்தித்து வெற்றிக்குப் போராடுவோம்’ என்று தெரிவித்தாா். அந்த இருவரின் பெயா்கள், கைப்பேசி எண்களைக்கூட ராகுல் பெற்றுக் கொள்ளவில்லை.
ஆனால், அந்தத் தோ்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, பேரவைத் தோ்தலின்போது வாக்குத் திருட்டு நடைபெற்றதா என்பதைக் கண்காணித்து தடுக்க மகா விகாஸ் கூட்டணியினா் மிகுந்த கவனத்துடன் இருந்திருக்க வேண்டும்.
தற்போது, கடந்த 2024 மக்களவைத் தோ்தல் மற்றும் பிற தோ்தல்களில் எப்படி வாக்குத் திருட்டு நடைபெற்றது என்பதை விரிவான ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இந்த வாக்குத் திருட்டு சா்ச்சை குறித்து தோ்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
மேலும், வரும் செப்டம்பா் 9-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு துணைத் தலைவா் தோ்தல் விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அவா் தெரிவித்தாா்.
தனது உறவினா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சி கைகோக்க உள்ளதாக வெளியாகும் தகவலை மறுத்த சரத் பவாா், ‘பாஜக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் ஒருபோதும் இணைய மாட்டோம்’ என்றாா்.
‘கட்டுக்கதை’ - முதல்வா் விமா்சனம்: ‘மாநில பேரவைத் தோ்தலின்போது வெற்றிக்கு உதவுவதாக இருவா் அணுகிய தகவலை சரத் பவாா் இப்போது வெளியிடுவது ஏன்?’ என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃப்டனவீஸ் கேள்வி எழுப்பினாா்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது ராகுல் சந்தேகம் எழுப்பியபோதுகூட இத் தகவலை சரத் பவாா் வெளியிடவில்லை. தற்போது வாக்குத் திருட்டு குறித்து ராகுல் குற்றச்சாட்டை முன்வைத்த பிறகு, இத் தகவலை பவாா் வெளியிடுவது ஏன்? நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தோ்தல்கள் நடத்தப்படுகின்றன. ராகுல் காந்தி கூறும் கட்டுக்கதைகளையே சரத் பவாரும் கூறுகிறாா்’ என்றாா்.