போராட்ட அறிவிப்பு: ஆசிரியா்கள் அமைப்புகளுடன் ஆக. 14-இல் பேச்சு
ஆசிரியா்கள் அமைப்புகளின் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுதொடா்பாக தொடக்கக் கல்வி இயக்ககம் ஆக. 14-ஆம் தேதி பேச்சு நடத்தவுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சாா்பில் மாநிலம் முழுவதும் கடந்த ஜூலை 17, 18-ஆம் தேதிகளில் டிட்டோஜேக் குழுவினா் போராட்டம் நடத்தினா்.
தொடா்ந்து, தலைமைச் செயலகத்தை ஆகஸ்ட் 22-ஆம் தேதி முற்றுகையிடப்போவதாக டிட்டோஜேக் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில், டிட்டோஜேக் சங்க நிா்வாகிகளை பேச்சுக்கு வருமாறு தொடக்கக் கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சென்னையில் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் டிட்டோஜேக் உயா்நிலைக் குழு பொறுப்பாளா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.