நீருக்குள் கூட புகைப்படம் எடுக்கலாம்: ஆக. 4-ல் அறிமுகமாகிறது விவோ ஒய் 400!
விவோ நிறுவனம் ஒய் 400 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அறிமுக தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி, புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
செய்யறிவு தொழில்நுட்பங்கள், பேட்டரி திறன் மற்றும் கேமரா மேம்பாடுகள் போன்றவை இந்த ஸ்மார்ட்போனின் சிறப்புகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட விவோ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகின்றன. தற்போது விவோ ஒய் 400 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் விவோ அறிமுகம் செய்யவுள்ளது.
விவோ ஒய் 400 சிறப்பம்சங்கள்
விவோ ஒய் 400 ஸ்மார்ட்போனானது, 6.67 அங்குல அமோலிட் திரை கொண்டது. சுமுகமாக திரை இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது. வெளிப்புற பயன்பாட்டின்போது திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1800 nits திறன் வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் 50MP கேமராவுடன் சோனி நிறுவனத்தின் IMX852 லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 2MP டெப்த் சென்சார் உடையது. நீருக்குள் இருந்தபடி புகைப்படம் எடுக்கலாம் என விவோ நம்பிக்கை வழங்குகிறது. நீர் மற்றும் தூசு புகாத்தன்மைக்காக IP68/69 திறன் வழங்கப்பட்டுள்ளது.
செய்யறிவு தொழில்நுட்பத்தில் பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
ஒலியை பல மொழிகளில் எழுத்தாக மாற்றக்கூடிய செய்யறிவு அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
பெரிய பத்தி உடைய சொற்களை அடுக்கவும், திருத்தவும் செய்யும்.
விடியோக்களில் இருந்தும் அதன் தரவுகளை வார்த்தைகளாக விவரிக்கும்.
கோப்புகளை பல்வேறு ஃபார்மட்களில் வழங்கும்
கேமராவில் ஒரு பொருளைக் காண்பித்தால், அது குறித்த மொத்த தரவுகளையும் எழுத்துகளாக காண்பிக்கும்.
புகைப்படங்களில் தேவையற்ற பின்புறங்களை நீக்கிக்கொள்ளும் செய்யறிவு அம்சங்கள் உள்ளடக்கியுள்ளது.
இத்தனை செய்யறிவு அம்சங்கள் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 20,000.