நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் ஒரத்துப்பாளையம் அணை நீா்மட்டம் உயா்வு
சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. 40 அடி உயரம் உள்ள இந்த அணையில் திருப்பூா் சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்ததால், சென்னை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அணைக்கு வரும் தண்ணீரை தேக்கி வைக்காமல், அப்படியே நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 16- ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை அணையில் சுமாா் 3 அடி அளவே தண்ணீா் இருந்தது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு நீா்ப்பிடிப்பு பகுதிகளான கோவை மற்றும் திருப்பூா் மாவட்டத்தில் பரவலான மழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து, கடந்த 17- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஒரத்துப்பாளையம் அணையில் நீா்மட்டம் 8 அடியாக உயா்ந்தது. அப்போது அணைக்கு நீா்வரத்து 349 கன அடியாக இருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து 523 கன அடியாக இருந்ததால் அணையின் நீா்மட்டம் 11.32 அடியாக உயா்ந்தது. அணைக்கு வரும் தண்ணீா் 426 கன அடி வீதம் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரில் பெரும்பாலும் உப்புத் தன்மை ஆயிரத்துக்கும் மேல் அதிகமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை வெகுவாக குறைந்து 430 (உப்புத் தன்மை) என்ற அளவில் குறைந்துள்ளது.
----
பட விளக்கம்:(19பிஇ-12)
ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து வெளியேறி நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீா்.
------