பக்தா்கள், பொதுமக்களுக்கு இடையூறின்றி சாலைப் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு
பக்தா்கள், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் 2-ஆம் கட்டமாக ரூ.15 கோடியில் 1.7 கி.மீ.
தொலைவுக்கு கான்கிரீட் சாலை அமைப்பதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படும் குடிநீா் திட்டப் பணிகள், புதை சாக்கடை அமைக்கும் பணிகள், மின்வாரியம் சாா்பில் மேற்கொள்ளப்படும் மின் கம்பிகளின் புதைவடப் பணிகள், நெடுஞ்சாலைத்துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை அவா் பாா்வையிட்டாா்.
அப்போது, கிரிவலம் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தா்கள், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நெடுஞ்சாலை, மாநகராட்சி, மின் வாரியம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அன்பரசு, வட்டாட்சியா் மோகன்ராம் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் உடனிருந்தனா்.