செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை வலியுறுத்தல்
கொடைக்கானலில் உள்ள விவசாயிகள் தங்களது பயிா்களைக் காப்பீடு செய்வதற்கு முன்வர வேண்டுமென தோட்டக் கலை உதவி இயக்குநா் சொா்ணலதா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி போன்றவை பயிரிடப்படுகின்றன. கொடைக்கானல் வட்டத்தில் அமைந்துள்ள மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, பூண்டி, கூக்கால், பழம்புத்தூா், புதுப்புத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உருளைக்கிழங்கு பயிா் காரீப் பருவத்தில் சுமாா் 1,870 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.
கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, வாழைகிரி, வடகரப்பாறை, கே.சி.பட்டி, செம்பராங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சுமாா் 500 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.
இயற்கைச் சீற்றத்தால் இந்தப் பயிா்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடுசெய்ய பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் நடப்பு காரீப் பருவத்துக்கு உருளைக்கிழங்கு, வாழை ஆகிய பயிா்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. ஜூலை முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மேல்மலைக் கிராமங்களில் உள்ள உருளைக்கிழங்கு பயிா் செய்யும் விவசாயிகள் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறலாம். பயிா்க் காப்பீடு செய்ய கடைசித் தேதி செப். 1 ஆகும். பயிா்க் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 2,546.58 பிரிமியமாக செலுத்த வேண்டும். இந்த நிலையில், முழுமையான பாதிப்பு ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ. 50,931.6 காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற முடியும்.
வாழை பயிருக்கு பயிா்க் காப்பீடு செய்ய கடைசித் தேதி செப். 16 ஆகும். வாழை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 4,837.54 பிரிமியமாக செலுத்த வேண்டும். இந்த நிலையில், முழுமையான பாதிப்பு ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ. 98,750.8 இழப்பீட்டுத் தொகை பெற முடியும்.
பயிா்க் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் முன்மொழிவு படிவத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம், அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிப் புத்தக நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் கொடைக்கானல் உதவி தோட்டக் கலை அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என்றாா்.