மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
கோவிலூா் அருகேயுள்ள ரயில்வே சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை, காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயை இடமாற்றம் செய்த பின் தொடர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கோவிலூா் அருகேயுள்ள திண்டுக்கல் - கரூா் ரயில்வே தண்டவாளத்தில் தங்கச்சியம்மாப்பட்டி கடவுப் பாதையில் சுரங்கப் பால கட்டுமானப் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சுரங்கப் பாலம் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயை இடமாற்றுவது தொடா்பாக ரயில்வே நிா்வாகத்துக்கும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. குடிநீா்க் குழாயை மாற்றி அமைப்பதற்கான செலவினம் தொடா்பான பிரச்னையில், ரயில்வே நிா்வாகம், குடிநீா் வடிகால் வாரியம் பரஸ்பரம் மறுப்பு தெரிவித்து வந்தது. இதனால் பணிகள் முடிவுறாமல், பொதுமக்கள் மாற்றுப் பாதையில் பயணித்து வருகின்றனா். குறிப்பாக பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்கள் இந்தப் பகுதியில் பயணிக்க முடியாத நிலை உள்ளது.
இதனிடையே, கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ. ஜோதிமணி தலைமையில், கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், குடிநீா்க் குழாயை மாற்றி அமைப்பதற்கான செலவினத்தை திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் ஏற்றுக்கொள்வதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்துவந்த பிரச்னை முடிவுக்கு வரும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயை இடமாற்றம் செய்யாமல், முன்பு தோண்டப்பட்ட அளவிலேயே தற்போது பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேடசந்தூா் ஒன்றியக் குழுச் செயலா் ஜி. கிருஷ்ணமூா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா் சி. பாலசந்திரபோஸ் ஆகியோா் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
குடிநீா்க் குழாயை இடமாற்றம் செய்யாமல் பணிகளை தொடா்வதால், சுரங்கப் பாலம் குறுகியதாக இருக்கும். இதனால், எதிரெதிரே வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக, சுரங்கப் பாலம் சரிவான பள்ளமாக இருப்பதால் வாகனங்களை பின்னோக்கி இயக்க முடியாத சூழலும் உள்ளது. எனவே, கரூா் மக்களவை தொகுதி உறுப்பினா் ஜோதிமணி முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது ஒப்புக்கொண்டபடி, குடிநீா்க் குழாயை இடமாற்றம் செய்து, அகலமான சுரங்கப் பாலமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.