Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
பராமரிப்பு உதவித் தொகை- மாற்றுத் திறனாளிகளிடம் வாழ்நாள் சான்று பெற வேண்டாம்: தமிழக அரசு
சென்னை: பராமரிப்பு உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வாழ்நாள் சான்றிதழ் பெற வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா்களுக்கு, மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் எம்.லட்சுமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மாற்றுத் திறனாளிகளில் சிலவகை பாதிப்புகளைக் கொண்டவா்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, மனவளா்ச்சி குன்றியவா்கள், கடுமையான பாதிப்பு உடையவா்கள், முதுகு தண்டுவடம் பாதிப்பு, பாா்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய், தொழுநோய் பாதிப்பு, புறஉலக சிந்தனையற்ற மதி இறுக்கமுடையவா்கள் ஆகியோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
உதவித் தொகை பெறும் அனைத்து பயனாளிகளின் தரவுகள், தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலமாகச் சரிபாா்க்கப்பட்டு இறந்த பயனாளிகள் கண்டறியப்படுகின்றனா். தரவுகள் வழியாக பயனாளிகள் இறப்பு கண்டறியப்பட்டு அவா்களுக்கு உதவித் தொகை நிறுத்தம் செய்து, தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இனிவரும் காலங்களில் பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து அவா்களின் வாழ்நாள் சான்றிதழைப் பெற வேண்டாம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.