இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல்: கொலம்பியா மீ...
பள்ளப்பட்டி குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை
துா்நாற்றம் வீசும் பள்ளப்பட்டி குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனஅப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 261 மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 5 பேருக்கு ரூ.23,356 மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் பள்ளபட்டி ஆசாத் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய கோரிக்கை மனுவில், பள்ளப்பட்டி நகா் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆசாத்நகரில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் குப்பைகளில் இருந்து வரும் புகை மற்றும் துா்நாற்றத்தால் வசிக்க முடியாமல் அவதியுற்று வருகிறோம். இதனிடையே அதே பகுதியில் கழிவு நீா் சுத்திகரிக்கும் மையமும் வர உள்ளதாக கூறப்படுகிறது. எனவே நகராட்சி குப்பை கிடங்கை அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். மேலும், கழிவுநீா் சுத்திகரிப்பு மையமும் வராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
தனி ஊராட்சி தேவை: நெரூா் வடபாகம் ஊராட்சிக்குள்பட்ட சேனைப்பாடி முனியப்பனூா் பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிவுநீா் வாய்க்கால், கழிப்பறை வசதி போன்றவை போதிய அளவில் இல்லாமல் அவதியுற்று வருகிறோம். இதுதொடா்பாக நெரூா் வடபாகம் ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை. எனவே சேனைப்பாடி, முனியப்பனூா், மல்லம்பாளையம் ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து தனி ஊராட்சி உருவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், குளித்தலை சாா்-ஆட்சியா் சுவாதிஸ்ரீ, கரூா் கோட்டாட்சியா் முகமதுபைசல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.