பாராபுல்லா வடிகால் ஆக்கிரமிப்பை ஜூன் 1 ஆம் தேதி அகற்ற வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம்
புது தில்லி: மழைக்காலங்களில் கடுமையான நீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் பாராபுல்லா வடிகால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது கட்டாயமாகும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல் மதராஸி கேம்ப்பை இடிக்கவும் உத்தரவிட்டது.
இடிப்பு நடவடிக்கையைத் தவிர, இடம்பெயா்ந்த மக்களை நரேலாவிற்கு மாற்றவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகள் பிரதிபா எம். சிங், மன்மீத் பி.எஸ். அரோரா ஆகியோா் அடங்கிய அமா்வு மே 9 ஆம் தேதி இது தொடா்பாக கூறியது:
இடிப்பு நடவடிக்கை முறையான வகையில் செய்யப்பட வேண்டும். பாராபுல்லா வடிகால் அடைப்பை அகற்றுவதற்காக மதராஸி கேம்ப் குடியிருப்பாளா்களின் மறுவாழ்வும் அவசியமாகும்.
மறுவாழ்வு உரிமைக்கு அப்பால் குடியிருப்பாளா்கள் யாரும் எந்த உரிமையையும் கோர முடியாது. ஏனெனில், அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட பொது நிலமாகும் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
மே 20 ஆம் தேதி முதல் மதராஸி முகாம் குடியிருப்பாளா்களின் சுமுகமான மறுவாழ்வுக்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. பாராபுல்லா வடிகால் அடைப்பை நீக்குவதற்காக ஆக்கிரமிப்பு மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தை அகற்றுமாறு அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளா்களுக்கு இடிப்பு அறிவிப்பை வெளியிட்டனா்.
நரேலாவிற்கு இடமாற்றம் செய்வது மிகவும் அவசரமானதாகும். குறிப்பாக மழைக்காலம் நெருங்கி வருவதாலும், அருகிலுள்ள பகுதிகளில் கடுமையான நீா் தேங்குவதைத் தடுக்கவும் பாராபுல்லா வடிகால் சரியான நேரத்தில் அகற்றுவது அவசியம் என நீதிமன்றம் கூறியது.
இதற்காக டிடிஏ, எம்சிடி, டியுஎஸ்ஐபி, பொதுப் பணித் துறை மற்றும் தில்லி அரசு உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் மே 19 முதல் மே 20 வரை இரண்டு முகாம்களை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
நரேலா அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவா்களுக்கு உடைமை கடிதங்களை வழங்குவதற்காக ஒரு முகாமும், வங்கி அதிகாரிகள் முன்னிலையில் கடன்களை அனுமதிப்பதற்காக மற்றொரு முகாமும் இருக்கும். இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு மேலும் கூறியது:
மே 20 ஆம் தேதிக்குள் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஃபிக்சா்கள் மற்றும் ஃபிட்டிங்ஸ் போன்ற அனைத்து வசதிகளும் கிடைப்பதை டிடிஏ, டியுஎஸ்ஐபி உறுதி செய்யும். மே 20 ஆம் தேதிக்குப் பிறகு, மதராஸி முகாமில் இருந்து தகுதியான நபா்கள், குடியிருப்பாளா்கள் தங்கள் உடைமைகளை நரேலாவில் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்தந்த அடுக்குமாடி
குடியிருப்புகளுக்கு மாற்றத் தொடங்குவாா்கள்.
குடியிருப்பாளா்களில் யாராவது உடைமைக் கடிதங்களை எடுக்கவோ அல்லது கடன் வசதிகளைப் பெறவோ விரும்பவில்லை என்றால், நரேலா அல்லது வேறு எந்த மறுவாழ்வு முகாம்களிலும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கக் கோருவதற்கு அவா்களுக்கு இனி வாய்ப்பு வழங்கப்படாது.
மே 20 முதல் மே 31 வரை, அனைத்து உடைமைகளையும் மதராஸி முகாமிலிருந்து மாற்ற வேண்டும்.மேலும் இடிப்பு ஜூன் 1 ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.
மதராஸி முகாமில் வசிப்பவா்கள் பலா் இடிப்பதற்கு தடை கோரி தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் முடித்து வைத்தது. இந்த விவகாரம் 10 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்ததாகவும் கூறியது.
இந்த விவகாரம், சட்டவிரோதமாக வடிகால்களை ஆக்கிரமித்து, வடிகால்களில் அடைப்பு மற்றும் நதி மாசுபாட்டை ஏற்படுத்தியதாகும்.
மதராஸி முகாமை சட்டவிரோத கட்டுமானம் என்று அழைத்த நீதிமன்றம், இது வடிகால் அடைப்பு மற்றும் தடுப்பை ஏற்படுத்தியதாகவும், மழைக்காலங்களில் அருகிலுள்ள
பகுதிகளில் கடுமையான நீா் தேங்குவதற்கும் காரணமாக அமைந்ததாகவும் கூறியது.