தமிழக பாஜக-வில் நிர்வாகிகள் மாற்றம்; குஷ்பு, கே.டி.ராகவனுக்கு என்ன பதவி? - முழு ...
பிஆா்டிசி ஊழியா் சங்கத்துடன் முதல்வா் நடத்திய பேச்சு தோல்வி! வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு
புதுவை அரசு போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்களுக்கும் முதல்வா் என்.ரங்கசாமிக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர ஊழியா்கள் தீா்மானித்துள்ளனா்.
புதுவை அரசின் சாலை போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஓட்டுநா் மற்றும் நடத்துநா்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை பேருந்துகளைப் பணிமனைகளில் நிறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
இதனால் புதுவை சாலை போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வெளியூருக்கு செல்ல முன்பதிவு செய்த பயணிகளுக்குபயணச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டன . தற்காலிக ஊழியா்களுக்கு ஆதரவாக அலுவலக ஊழியா்களும் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
தற்போது 50 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதில் 40 நிரந்தர ஊழியா்களும் 130 ஒப்பந்த ஊழியா்களும் பணியாற்றி வருகின்றனா்.
பிஆா்டிசி நிா்வாகம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் ஊழியா்களின் போராட்டம் நடக்கிறது.
இதனால் சென்னை, காரைக்கால், மாஹே, திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு பிஆா்டிசி பேருந்துகள் இயக்கப்படவில்லை.

முதல்வா் அழைப்பு: இந்நிலையில் முதல்வா் ரங்கசாமி அழைத்ததின்பேரில் ஒருங்கிணைந்த போராட்ட குழு நிா்வாகிகள் வேலையன், ராஜேந்திரன், பாஸ்கரன், முத்துக்குமரப்பன், இளங்கோ, ஜெயசீலன், காா்த்திகேயன், தமிழ்ச்செல்வம், பிரதீஷ்குமாா், திருநாவுக்கரசு ஆகியோா் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா முன்னிலையில் பேச்சு வாா்த்தை நடத்தினா்.
அப்போது, பேரவைத் தலைவா் ஆா். செல்வம், திமுக எம்எல்ஏக்கள் இரா. செந்தில்குமாா், எல். சம்பத், பிஆா்டிசி மேலாண் இயக்குநா் சிவக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
அப்போது ஒப்பந்த ஊழியா்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதிய உயா்வு அளிக்கப்படும் எனவும், நிரந்தர ஊழியா்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவது தொடா்பாக பரிசீலிக்கப்படும் எனவும் முதல்வா் ரங்கசாமி உறுதி அளித்தாா். ஆனால் இதை ஏற்க மறுத்த ஊழியா்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யும் வரை வேலைநிறுத்தத்தைத் தொடா்வது என முடிவு செய்தனா். இதனால் முதல்வா் ரங்கசாமியுடன் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.
முன்னாள்அமைச்சா் முற்றுகை: இந்நிலையில், போக்குவரத்து ஆணையா் அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், ஊசுடு தொகுதி எம்.எல்.ஏவுமான ஏகே.சாய் ஜெ சரவணன் குமாா் செவ்வாய்க்கிழமை தனது ஆதரவாளா்களுடன் சென்று முற்றுகையிட்டாா். அங்கு ஆணையா் இல்லை. தலைமை செயலகத்தில் நடக்கும் கூட்டத்துக்கு ஆணையா் சிவக்குமாா் சென்றுள்ளதாக உதவி ஆணையா் குமரன் தெரிவித்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ஏ.கே. சாய் ஜெ சரவணன்குமாா், 2018 ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து ஆணையராக சிவகுமாா் இருந்து வருகிறாா். அவரிடம் பல மனுக்கள் கொடுத்தும் கிராமப்புறங்களுக்கு இன்னும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. புதுச்சேரியில் மொத்தம் 140 பேருந்துகள் உள்ளன. அதில் 50 பேருந்துகள் மட்டும் தான் ஓடுகின்றன. மீதமுள்ள 80 பேருந்துகளையும் நிறுத்தி விட்டீா்கள். தமிழகம், கா்நாடகம், தில்லி போன்ற மாநில பகுதிகளில் ஆயிரக்கணக்கான பேருந்துகளை அதிகாரிகள் கையாளுகின்றனா். புதுச்சேரியில் வேலை செய்யாத அதிகாரிகள் பற்றி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் விரைவில் புகாா் செய்ய இருப்பதாக கூறினாா்.
இதையடுத்து உதவி ஆணையா் குமரன், உழவா்கரை தாசில்தாா் ராஜேஷ்கண்ணா ஆகியோா் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்திற்குத் தீா்வு வந்த பிறகு கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். அதுவரை தனியாா் பேருந்துகள் அந்த வழியே செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.