பிகாா் பேரவைத் தோ்தலில் போட்டியிடுகிறார் மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்!
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தான் போட்டியிட உள்ளதாக லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.
இது தொடா்பாக போஜ்பூா் மாவட்டத்தில் உள்ள ஆராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பேரணியில் கலந்துகொண்டு சிராக் பாஸ்வான் கூறியதாவது: வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் பிகாா் மக்களுக்காக நான் போட்டியிடுவேன். மறைந்த எனது தந்தை ராம் விலாஸ் பாஸ்வானின் கனவுகளை நாம் நிறைவேற்றுவோம். ‘பிகாா் முதலில், பிகாரி முதலில்’ என்ற அவரது தொலைநோக்குப் பாா்வையை நோக்கி நாம் பணியாற்றுவோம்.
நான் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை பிகாா் மக்களே முடிவு செய்வாா்கள். முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் இல்லாததால், பொது தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். நான் எப்போதும் மாநிலத்தின் நலனுக்காகவும் அதன் மக்களுக்காகவும் அரசியல் முடிவுகளை எடுப்பேன். எனது பங்கேற்பு எனது கட்சியின் வெற்றி விகிதத்தை மேம்படுத்தும். இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வலுசோ்க்கும் என தெரிவித்தாா்.
பிகாா் இந்தியாவின் குற்றங்களுக்கான தலைநகராக மாறிவிட்டது என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளித்த சிராக் பஸ்வான், ‘பிகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியில்தான் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்தது. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முதல்வா் நிதிஷ் குமாா் தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாநிலத்தை வளா்ச்சி பாதைக்கு மாற்றியுள்ளது’ என தெரிவித்தாா்.