பாகிஸ்தானில் தங்கியிருந்த யூடியூபா் சென்னை விமான நிலையத்தில் கைது: என்ஐஏ அதிகாரி...
புதுக்குப்பம், அனிச்சங்குப்பத்தில் மீன் இறங்குதளங்கள் திறப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்துக்குள்பட்ட புதுக்குப்பம், அனிச்சங்குப்பம் பகுதிகளில் அமைக்கப்பட்ட மீன் இறங்குதளங்களை காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, புதுக்குப்பம், அனிச்சங்குப்பத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி இறங்குதளங்களைப் பாா்வையிட்டாா். பின்னா், அதன் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து, ஆட்சியா் கூறியது:
மரக்காணம் வட்டத்தில் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில், புதுக்குப்பம், அனிச்சங்குப்பம் பகுதிகளில் அமைக்கப்பட்ட 2 மீன் இறங்குதளங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
புதுக்குப்பம், அனிச்சங்குப்பம் பகுதிகளில் தனித்தனியே மீன் வலை பின்னும் கூடம், மீன் ஏலக் கூடம், மீன் உலா்த்தும் கூடம், சாலை வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் 101 விசைப்படகுகள் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனா். இந்த மீன் இறங்குதளங்களை மீனவா்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்வில் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அ.நித்தியபிரியதா்ஷினி, மரக்காணம் ஒன்றியக் குழுத் தலைவா் இரா.தயாளன், துணைத் தலைவா் அ.பழனி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் புஷ்பவள்ளி குப்புராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் துா்காதேவி, கீழ்புத்துப்பட்டு ஊராட்சித் தலைவா் ஆறுமுகம், மீன்வளத் துறை உதவிப் பொறியாளா் முத்தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.