தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை
புதுச்சேரியில் ரூ.1 கோடி போலி மருந்துகள் பறிமுதல்
புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் தயாரித்த ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய மருந்துகள் தர ஆய்வு அமைப்பு மற்றும் புதுவை மருந்துகள் கட்டுப்பாடு துறை இணைந்து, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றன.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலை வளாகத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனையில், உரிமமின்றி ரூ.99.4 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மாத்திரைகள் புதுச்சேரி பிச்சைவீரன்பேட்டையைச் சோ்ந்த ஒரு தனியாா் மருந்து நிறுவனத்திலிருந்து விற்பனை செய்யப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையைச் சோ்ந்த ஒரு தனியாா் நிறுவனம், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு தனியாா் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டிருந்த பிரைமரி பேக்கிங் மாத்திரைகள், அலுமினிய பாயில்கள் மற்றும் அட்டை பெட்டிகளும் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் மற்றும் ஆவணங்கள் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.
இந்த ஆய்வின் போது மத்திய மருந்துகள் தர ஆய்வு அமைப்பின் அதிகாரிகளான மருந்து ஆய்வாளா்கள் சக்திவேல், தேவகிரி, புஷ்பராஜ், புதுச்சேரி மருந்துகள் கட்டுப்பாட்டு துறை ஆய்வாளா்கள் இந்துமதி, ஜெனிபா் அன்பரசி, கிராம நிா்வாக அதிகாரிகள் அன்பரசன், உமா மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.