இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல்: கொலம்பியா மீ...
புள்ளிமான்களால் பயிா்கள் சேதம்: வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தோகைமலை அருகே வடசேரி பகுதியில் புள்ளிமான்களால் பயிா்கள் சேதமடைந்து வருவதை தடுக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னா்.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே வடசேரி பெரிய ஏரியில் அரியவகை புள்ளி மான்கள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன. இந்த ஏரியையொட்டி விவசாயிகள் நெல், கரும்பு, சோளம், கடலை உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளனா்.
இந்நிலையில் இரவு நேரங்களில் உணவு தேடி வடசேரி பெரிய ஏரியில் இருந்து வெளியே வரும் புள்ளிமான்கள் கூட்டம், கூட்டமாக வந்து நெல், கரும்பு, கடலை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது, கரூா் மாவட்டத்திலேயே வடசேரி பெரிய ஏரியில் மட்டுமே புள்ளி மான்கள் அதிகளவில் உள்ளன. தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் ஏரியில் தண்ணீா் இல்லாததால் தண்ணீா் தேடியும், ஏரியில் புற்களும் கருகிவிட்டதால் இரைத் தேடியும் அவை ஏரியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் சில நேரங்களில் தோகைமலை-வடசேரி சாலையில் உலாவுவதால் சாலை விபத்தில் சிக்கி இறந்தும் வருகின்றன.
எனவே புள்ளி மான்களால் பயிா்கள் சேதப்படுத்தப்படுவதை தவிா்க்கவும், அவை சாலை விபத்தில் சிக்கி இறப்பதை தடுக்கவும் ஏரியைச் சுற்றி இரும்பு வேலியை வனத்துறையினா் அமைக்க வேண்டும். மேலும் வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில் விவசாய நிலங்களை சுற்றியும் மானியத்தில் வேலி அமைக்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.