பறக்கும் ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு: தெற்கு...
பெயர் நரேந்தர், வேலை சரண்டர்! காங்கிரஸ் கடும் விமர்சனம்!
இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்காத பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் மூத்த நிர்வாகி பவன் கேரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது.
தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு போர் பதற்றம் நிலவிய நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை உடன்பட்டதாகவும், போர் முடிவுக்கு வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
இதையடுத்து இரு நாட்டு அதிகாரிகளும் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். பின்னர், பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி, போரை நிறுத்த கோரியதால் தான் போரை நிறுத்தினோம் என்று இந்தியா தெரிவித்திருந்தது.
ஆனால், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் நடத்திய பேச்சுவார்த்தை மூலமே இந்தியா - பாகிஸ்தான் மோதல் நிறுத்தப்பட்டதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், டிரம்ப்பின் கருத்துக்கு பதிலளிக்காமல் மெளனம் காக்கும் பிரதமர் மோடியை பவன் கேரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களுடன் பவன் கேரா பேசியதாவது:
”இவரின் பெயர் மட்டுமே நரேந்தர், செய்யும் பணி சரண்டர். வர்த்தகத்தை பயன்படுத்தியே போரை நிறுத்தியதாக கடந்த 22 நாள்களில் 12 முறைக்கு மேல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துவிட்டார்.
ஆனால், பல நாள்களாக பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருக்கிறார். கோழைத்தனமான வரலாறு கொண்ட ஒரு அமைப்பைச் சேர்ந்தவர் நாட்டை வழிநடத்துவது எதிர்காலத்துக்கு ஆபத்தானது.
போர் நிறுத்தம் எப்படி ஏற்பட்டது என்பதுதான் நாட்டின் பேசுபொருளாக உள்ளது. டிரம்ப் ஏன் போர் நிறுத்தத்தை அறிவித்தார்? டிரம்ப் அறிவித்ததன் மூலம் நாடு அவமதிக்கப்பட்டது. காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்வதாக டிரம்ப் கூறியதன் மூலம் நாட்டை அவமதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.