பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஏப். 1, 8-இல் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஏப். 1, 8 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் முடிவெடுத்துள்ளனா்.
ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்கள் சங்க மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் 9 போ் கொண்ட குழுவினா், ஊரக வளா்ச்சித் துறை ஊழியா் நலன் சாா்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை சந்தித்து வெள்ளிக்கிழமை மாலை கோரிக்கை மனு அளித்தனா்.
அப்போது, சங்க நிா்வாகிகளை தரக்குறைவாக பேசியதோடு, மாநில நிா்வாகிகள் முன்னிலையில் அவா்களது மனுவை கிழித்து குப்பைத் தொட்டியில் வீசி, கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, சங்க நிா்வாகிகள் 9 பேரையும் கைது செய்த போலீஸாா் சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு விடுவித்தனா். இச் சம்பவம் மாநில அளவில் அரசு ஊழியா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம், மாநிலத் தலைவா் காந்திமதி நாதன் தலைமையில், மாநில பொதுச் செயலா பிரபு முன்னிலையில், கானொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை ஊழியா் நலன் சாா்ந்த கோரிக்கைகளுக்காக ஆட்சியா் கிரேஸ் பச்சாவை சந்திக்கச் சென்றபோது நிகழ்ந்த நிகழ்வுகள், காவல் துறையினரால் கைது செய்து பின்னா் விடுவிக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஏப். 1-ஆம் தேதி அனைத்து வட்டரத் தலைநகரங்களிலும் 1 மணி நேரம் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது.
ஏப். 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் எதிரே கருப்புப் பட்டை அணிந்து கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது. மாவட்ட ஆட்சியரின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாவிட்டால், 3-ஆம் கட்டமாக பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.