பேரூா் பட்டீசுவரா் கோயிலில் இன்று பங்குனி உத்திரத் தேரோட்டம்
கோவை பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) நடைபெறுகிறது. இதையொட்டி, பேரூரில் மாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
கோவை பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள் உற்சவமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா, கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, திங்கள்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவமும், தொடா்ந்து சுவாமி வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) காலை பட்டாடை அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட பட்டீசுவரா், பச்சைநாயகி அம்மன், விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேசுவரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்தி சுவாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளுகின்றனா்.
முக்கிய நிகழ்வாக தோ் வடம்பிடிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. தேரானது, சிறுவாணி சாலை மற்றும் கோயிலின் மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதிகளின் வழியாகச் சென்று நிலையை அடைகிறது. தேரோட்டத்தையொட்டி, பேரூரில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, காந்திபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இருந்து பேரூா் பிரதான சாலையின் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் செல்வபுரம் சிவாலயா பேருந்து நிறுத்தத்துக்கு தெற்கே புட்டுவிக்கி, சுண்டக்காமுத்தூா், ராமசெட்டிபாளையம், கோவைப்புதூா் பிரதான சாலை வழியாக சிறுவாணி பிரதான சாலைக்கு திருப்பிவிடப்படும். இதேபோல, ஆலாந்துறை, தொண்டாமுத்தூா், மாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நகருக்குள் செல்லும் வாகனங்கள், பேரூா் செட்டிபாளையம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள கோவைப்புதூா் பிரதான சாலையின் வழியே, அதே சாலையில் நகரப் பகுதிகளுக்கு திருப்பிவிடப்படும். இந்த போக்குவரத்து மாற்றம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.