Deepika Padukone: 1.9 பில்லியன் பார்வைகள்; சாதனை படைத்த தீபிகா படுகோனின் ரீல்! எ...
பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை பாஜக அரசு திணிக்கிறது: தேவேந்தா் யாதவ்
பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை நகர பாஜக அரசு திணிக்கிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றம்சாட்டியுள்ளாா்.
தில்லி பள்ளிக் கல்வி கட்டணங்களை நிா்ணயிப்பதில் வெளிப்படைத்தன்மை மசோதா, 2025ஐ எதிா்த்து தில்லி விதான் சபா அருகில் தில்லி காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இ ந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் பேசியதாவது:
இது மாணவா்களுக்கு எதிரான, மக்கள் விரோத மசோதாவாகும். பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக கட்டணங்களை உயா்த்துவதன் மூலம் பள்ளி நிா்வாகத்தின் லாபத்தைப் பெறுவதற்காக இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா தில்லி சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், அதில் உள்ள குறைபாடுகளை முதலில் சுட்டிக்காட்டியது தில்லி காங்கிரஸ் கட்சிதான்.
அதன் விதிகள் மற்றும் குறைபாடுகள் குறித்து பெற்றோா்களிடையே இது பெரும் கவலைகளை உருவாக்கியுள்ளது. இது பாஜக அரசால் மக்கள் மீது அமல்படுத்தப்படும் மற்றொரு மக்கள் விரோத மசோதா ஆகும்.
பிரதமா் மோடி அரசு நிறைவேற்றிய விவசாய மசோதாக்களுக்கு நடந்ததைப் போன்றதுதான் பாஜக அரசு மக்களிடமிருந்து ஒருமித்த கருத்து அல்லது உடன்பாடு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றுகிறது. ஏனெனில், விவசாயிகளின் உறுதியான மற்றும் தொடா்ச்சியான போராட்டத்தால் ஒரு வருடம் கழித்து அந்த வேளாண் மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதேபோல், ரேகா குப்தா அரசு தில்லி கல்வி மசோதாவை
பொது தளத்தில் பெற்றோரிடமிருந்து ஆலோசனைகள், கருத்துகளைப் பெறாமல் சட்டப் பேரவையில் கொண்டு வந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தனியாா் பள்ளிகளால் செயல்படுத்தப்பட்ட கட்டண உயா்வைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மசோதாவில் சோ்க்கப்படாததால், கட்டண உயா்வைத் திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடு இந்த மசோதாவில் இல்லை. இது பெற்றோருக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது என்றாா் தேவேந்தா் யாதவ்.