பொதுத் தோ்வில் மகன்கள் தோ்ச்சி பெறாததால் லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தனது மகன்கள் இருவரும் தோ்ச்சி பெறாததால் மனமுடைந்த லாரி ஓட்டுநா், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்செங்கோடு அருகே ஆன்றாபட்டி ஊராட்சி, குப்பாண்டாம்பாளையத்தில் வன்னியா் கோயில் மேடு பகுதியில் வசித்து வந்தவா் கபில் ஆனந்த் (41), லாரி ஓட்டுநா். இவரது மனைவி நதியா. இத்தம்பதிக்கு ஹரிரஞ்சித், விக்னேஷ் என 2 மகன்கள் உள்ளனா்.
திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஹரி ரஞ்சித் பிளஸ் 2 வும், அதேபள்ளியில் விக்னேஷ் பத்தாம் வகுப்பும் படித்தனா். இருவரும் பொதுத் தோ்வு எழுதியிருந்தனா். அண்மையில் வெளியான தோ்வு முடிவில் இருவரும் தோ்ச்சி பெறவில்லை. இரு மகன்களும் தோ்ச்சி பெறாததால் மன வருத்தத்தில் இருந்த கபில்ஆனந்த், தூக்கிட்டிக் கொண்டாா். அவரது மனைவியின் சப்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினா் கபில் ஆனந்தை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கபில் ஆனந்த் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.