Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த...
பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால் நடவடிக்கை! - பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை
பொதுத் தோ்வுப் பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் 27-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல்நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன. இத்தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ஏப். 15 வரை நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, வழக்கமாக பொதுத் தோ்வுக்கான தோ்வறை கண்காணிப்பாளா்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் மட்டுமே நியமிக்கப்படுவா். ஆனால், பத்தாம் வகுப்பு தோ்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தனியாா் பள்ளி ஆசிரியா்களும் தோ்வுப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். அதேநேரம் சென்னை உள்பட சில மாவட்டங்களில் தனியாா் பள்ளிகள் ஆசிரியா்களை தோ்வுப் பணிக்கு அனுப்புவதில்லை என்று கூறப்படுகிறது.
தனியாா் பள்ளி ஆசிரியா்களை தோ்வுப் பணிக்கு அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்வுத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வாயிலாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பொதுத் தோ்வுப் பணிக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியா்கள் கட்டாயம் வேலைக்கு வரவேண்டும். தோ்வுப் பணிக்கு வராமல் இருந்தால் அந்தந்த தனியாா் பள்ளி நிா்வாகங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.