பொதுமக்களுக்கு தடை: புறாக்களுக்கு தீனி போடும் மும்பை மாநகராட்சி; மக்கள் என்ன சொல்கிறார்கள்?
மும்பை முழுவதும் புறாக்களுக்கு தீனி போடுவதற்கு பிரத்யேக இடங்கள் இருக்கிறது. இந்த இடங்களில் பொதுமக்கள் மற்றும் குஜராத் வியாபாரிகள் புறாக்களுக்கு தானியங்களை உணவாக கொடுத்து வந்தனர். இதற்காக புறாக்கள் கூடும் இடத்தில் வியாபாரிகள் சோளம் மற்றும் கம்புகளை விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் புறாக்களால் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக கூறி புறாக்களுக்கு திறந்த வெளியில் சாப்பாடு கொடுக்க தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் மும்பை முழுவதும் இருக்கும் கபூர்த்தர்கானா என்று அழைக்கப்படும் புறாக்களுக்கு சாப்பாடு கொடுக்கும் இடங்களில் தார்பாய் கட்டி தீனி போட மாநகராட்சி ஊழியர்கள் தடை விதித்தனர்.
அத்தடையை மீறி புறாக்கள் தார்பாய் மீது நின்று சாப்பாடு கிடைக்குமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றன. புறாக்களுக்கு சாப்பாடு கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால் ஜெயின் மதத்தினர், குஜராத்தியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருகிறது.
விலங்குகள் நல ஆர்வலர்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மும்பையில் போராட்ட பேரணி நடத்தினர். மாநில பாஜக அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா புறாக்களுக்கு உணவளிக்க தற்காலிக இடங்கள் உருவாக்கப்படவேண்டும் என்று மும்பை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, முதல்வர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது புறாக்கள் சாப்பாடு இல்லாமல் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார்.

அதோடு புறாக்களுக்கு சாப்பாடு கொடுப்பது மத உணர்வோடு சம்பந்தப்பட்டது என்றும் மேனகா காந்தி எடுத்துக்கூறினார். இதையடுத்து புறாக்களுக்கு தீனி போடும் பொறுப்பை இனி மாநகராட்சி பார்த்துக்கொள்ளும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி நிர்வாகம் புறாக்களுக்கு உணவு வழங்குவதை ஒழுங்குபடுத்தவேண்டும் என்றும், புறாக்கள் பட்டினியால் சாகக்கூடாது என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மும்பையில் இனி மாநகராட்சி ஊழியர்களே புறாக்களுக்கு தீனி போடுவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் சாப்பாடு போடுவதோடு மட்டுமல்லாது, புறாக்களின் எச்சத்தையும் அப்புறப்படுத்துவார்கள்.
மேலும் புறாக்களால் மனிதர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் புறாக்களுக்கு காலம் காலமாக தாங்கள் தீனி போட்டு வந்தோம். அந்த உரிமை இப்போது பறிக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் மிதேஷ் ஜெயின் கூறுகையில்,''புறாக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சாப்பாடு கொடுக்கும் என்று கூறி அரசியல்வாதிகள் புறாக்களுக்கு சாப்பாடு கொடுப்பவர்களை முட்டாளாக்க நினைக்கின்றனர்.

பொதுமக்கள் பக்தியாலும், அன்பாலும் புறாக்களுக்கு சாப்பாடு போடுகின்றனர். ஆனால் இதில் மாநகராட்சி நிர்வாகம் நேர்மையாக நடந்துகொள்ளுமா என்ற சந்தேகம் இருக்கிறது. புறாக்களுக்கு எவ்வளவு சாப்பாடு கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
புறாக்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தீனி போடுபவர்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் வசூலித்து வருகின்றனர். மீராபயந்தர் பகுதியில் புறாக்களுக்கு தீனிபோடுவதை தட்டிக்கேட்ட தந்தை மகன் தாக்கப்பட்டனர்.
மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ், மகாலட்சுமி ரேஸ்கோர்ட்ஸ் மைதானம், கோரேகாவ் ஆரே காலனி, போரிவலி தேசிய பூங்கா போன்ற பகுதியில் புறாக்களுக்கு சாப்பாடு கொடுக்க பிரத்யேக இடங்களை உருவாக்க மாநகராட்சி பரிசீலித்து வருகிறது.
பெங்களூருவில் மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களுக்கு சாப்பாடு கொடுக்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. அதே போன்று மும்பையில் மாநகராட்சி நிர்வாகம் புறாக்களுக்கு சாப்பாடு கொடுக்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது.