கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
மகாராஷ்டிர பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!
மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஆன்லைன் ரம்மி விளையாடிய சர்ச்சையில் சிக்கிய அமைச்சா் மாணிக்ராவ் கோகடே, வேளாண் துறையில் இருந்து விளையாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தேசியவாத காங்கிரஸை (அஜித் பவார் அணி) சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே, ரம்மி விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
இந்த விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த எதிா்க்கட்சிகள், விவசாயிகளின் மீது அரசு அக்கறையின்றி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சா் கோகடே, ‘சட்டப்பேரவையில் நடந்த விவாதங்களை பாா்க்க யூடியூபை திறக்க முற்பட்டபோது, கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ரம்மி விளையாட்டு செயலி திறந்துவிட்டது. அதை நான் தவிா்க்க முயன்றேன்; ரம்மி விளையாடவில்லை. அவை ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது’ எனத் தெரிவித்திருந்தார்.
துறை மாற்றம்
இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் துணை முதல்வர்கள் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு மாணிக்ராவ் கோகடேவிடம் இருந்த வேளாண் துறை பறிக்கப்பட்டு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த தத்தத்ராயா பார்னேவுக்கு வேளாண் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.