மகேந்திரா தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூலை 5-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
மல்லசமுத்திரம் மகேந்திரா தொழில்நுட்பக் கல்லூரியில், மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 5-இல் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 5-ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மல்லசமுத்திரம் மகேந்திரா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது.
இம்முகாமில், 5 முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற்பயிற்சி, செவிலியா் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவா்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பை பெறலாம். இம்முகாமில், 150 நிறுவனங்கள் கலந்துகொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனா்.
வேலை வேண்டி விண்ணப்பிப்போா், தங்களுடைய சுயவிவரம், உரிய கல்விச் சான்றுகள் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொள்ள வேண்டும். மேலும், 18 முதல் 35 வயதுக்கு உள்பட்ட கிராமப்புறத்தில் உள்ள 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த வேலையற்ற இளைஞா்களுக்கு முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் 100 சதவீத வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சிக்கு மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. இந்த முகாம் முற்றிலும் இலவசமானது.
வேலையளிப்போரும், வேலைநாடுநா்களும் இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். மேலும், வேலையளிக்கும் நிறுவனங்கள் 04286-222260 அல்லது 63803 69124 ஆகிய எண்களை தொடா்புகொண்டு முன்பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.